Saturday, February 8, 2014

ஜப்பானில் ஒலிக்கும் தமிழர் குரல்!

  உலகின் அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். சில நாடுகளின் பெயர்களைப் புதிதாய் கேட்போம். அங்கும் தமிழர்கள் இருப்பதைக் கேட்டு வியப்படைவோம். மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளில் தமிழர்கள் வாழ்வதில் நமக்கு ஆச்சர்யம் இல்லை. அதேபோல அய்ரோப்பிய நாடுகள் முழுக்கவும் கூட தமிழர்கள் நிறைந்துள்ளனர். இன்னும் சொன்னால் ஆப்பிரிக்க நாடுகளில் கூட நம்மவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எண்ணிக்கையில் குறைவு. அதேபோன்று ஜப்பானிலும் தமிழர்கள் குறைவாய் இருக்கின்றனர்.  "ஒ.. அந்த நாட்டிலா இருக்கின்றீர்கள்?" என்கிற வியப்புக் கேள்விக்குள்ளே ஜப்பானும் வருகிறது. 

பொதுவாக வெளிநாட்டில் வாழ்கிறவர்கள் தங்களுக்குச் சிறப்புத் தகுதி இருப்பதாக நினைத்துக் கொள்வதுண்டு. சொந்த நாட்டிற்குள் வரும்போது அந்த மிடுக்குத் தெரியும். அதேநேரம் வெளிநாட்டில் வசிக்கும் போது மிக இயல்பாகவே இருப்பர். தானுண்டு தன் வேலையுண்டு எனத் திகழ்வர்.  சக தமிழர்களைச் சந்திப்பதிலும், அறிமுகம் கொள்வதிலும் ஆர்வமின்றி இருப்பர். அந்த நாட்டில்  உள்ள தமிழ் அமைப்புகளில் பங்கேற்காமலும், பல நேரம் அது தொடர்பாய் அறியாமலுமே காணப்படுவர். இதற்கு ஆர்வமின்மைக் காரணமாக இருந்தாலும், வெளிநாட்டில் ஏன் இந்த வேண்டாத வேலை? இதனால் பணி பாதிக்கப்பட்டால் என்ன செய்வது? என்கிற பயமாகவும் இருக்கலாம். 

ஆனால் எல்லோரும் அப்படியா என்றால் கிடையாது. பத்தாயிரம் பேருக்குப் பத்து பேர் எங்காவது ஒரு மூலையில் வேலை செய்கிறார்கள். அந்தப் பத்துப் பேரைத்தான் சிறுபான்மை என்றும், உங்களால் என்ன செய்துவிட முடியும் என்றும் பெரும்பான்மைக் கேள்விக் கேட்கிறது. ஆனால் அந்தப் பத்துப் பேர் உருவாக்குகிற "நெருப்புப் பொறி"யில் தான் பல ஆயிரம் பேர் வெளிச்சம் பெறுகிறார்கள்.

அப்படியான 'பொறி" வைக்கிற பணியை நம் தோழர் ஒருவர் செய்து வருகிறார். அதுவும் ஜப்பானில். அந்த நாட்டின் வரலாற்றிலே இல்லாத ஒன்றையும் அவர் செய்திருக்க, ஜப்பான் அரசாங்கம் அவரை மேலும் கீழும் பார்க்கிறது. ஆனால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் அவர் செய்த நேர்மையான முறைகள். சில நாள்கள் விடுப்பில் தமிழகம் வந்த அவரை, உண்மை இதழுக்காய் சந்தித்தோம். கொஞ்ச நேரம் அவருடன் இருப்போம், வாருங்கள். 

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

என் பெயர் இரா.செந்தில்குமார். மன்னார்குடி என் சொந்த ஊர். தஞ்சை பூண்டிக் கல்லூரியிலும், சென்னையில் மேற்படிப்பும் முடித்து, 2002 ஆம் ஆண்டு ஜப்பான் சென்றேன். 12 ஆண்டு கால வெளிநாட்டு வாழ்க்கையோடு இன்னும் தொடர்கிறேன். 

உங்களின்  கொள்கை என்பது ? 

மன்னார்குடி தேரடி திடல் அருகே எங்கள் வீடு. அங்கு நடைபெறும் கூட்டங்கள் அனைத்தையும்  நான் விரும்பினாலும், இல்லாவிட்டாலும் கேட்டுத்தான்   ஆக வேண்டும். எனினும் நான் விரும்பியே கேட்டேன். அப்போது என் வயது பத்தாக இருந்தது. மிகச் சிறிய வயது. எனினும் திராவிடர் கழகக் கூட்டங்களும், கம்யூனிஸ்ட் கூட்டங்களும் எனக்குள் ஏதோ செய்து வந்தன. ஒரு விசயத்தை வீட்டில் ஒரு மாதிரி சொல்ல, கூட்டங்களில் வேறு மாதிரி சொல்கிறார்களே என்கிற சிந்தனையின் தொடர்ச்சியில் தொடங்கியது  என் கருத்தாக்கம்.  என் வயது நண்பர்கள் விளையாட்டிலும், திரைப்படத்திலும் இருக்க நான் வேறு மாதிரியாக காணப்பட்டேன். கூட்டங்கள் நடைபெறும் தொடர் வேளைகளில், எல்லோரும் வீடுகளில் இருக்க, நான் மட்டும் மேடை முன் முதலில் நின்று, கடைசி ஆளாய் திரும்புவேன்.  இறுதியாய் எனக்கான கருத்தை உருவாக்க அதுவே காரணமானது.

கூட்டங்கள் கேட்பதற்கு வீட்டில் எதிர்ப்பு இல்லையா ?

என்னமோ தெரியவில்லை, யாருமே எதிர்க்கவில்லை. ஒருவேளை படிப்பிற்கு இடையூறு இல்லாத வகையில் நான்  செயல்பட்டது அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். பள்ளி இடைவேளையில், வாசல் முன்பு  திராவிடர் கழகத் தெருமுனைக் கூட்டம் நடைபெறும். நன்றாக நினைவிருக்கிறது. சாரங்கன் அய்யாவை அங்கு பார்ப்பேன். இருக்கும் கொஞ்ச நேரத்திலும் தெருமுனைக் கூட்டம் கேட்டுவிட்டு, பள்ளிக்கு ஓடுவேன். இதுபோன்ற தெருமுனைக் கூட்டங்கள்  நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுக விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இப்படித்தான் நான் வளர்ந்து கொண்டேன்.

ஜப்பான் வாழ்வு குறித்துச் சொல்லுங்கள் ?

தமிழ்நாட்டில் இருந்த வரை பல்வேறு கூட்டங்கள் செல்வதும், படிப்பதுமாக இருந்தேன். ஜப்பான் சென்ற பிறகு என்னால் வேலை, வீடு என்றிருக்க முடியவில்லை. அப்போது  "மனவெளிப் பயணம்"  (manavelippayanam.blogspot.inஎன்கிற வலைப்பூ தொடங்கி எழுதி வந்தேன். தினமும் தமிழ்நாடு, இந்தியச் செய்திகளை ஒரு மணி நேரம் வாசித்து வந்தேன். இப்போதும் வாசிக்கிறேன். பணிச்சுமை அதிகம் இருந்தாலும், அதை வாசிக்காமல் இருந்தால் சுமைக் கூடுவதாய் உணர்ந்தேன். என் வாசிப்பில் பத்துக்கும் மேற்பட்ட இலக்கிய இதழ்கள் உள்ளிட்ட எந்த ஒன்றையும் நான் விடவில்லை. ஜப்பானில் எங்காவது தமிழர்கள் கிடைத்தால் பேசி மகிழ்வேன். ஏனெனில் அங்கு நம்மவர்கள் குறைவு. இப்படியான வேளையில் அங்கு தமிழர் திருநாளில் தமிழர்கள் ஒன்று கூடுவார்கள் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். ஆனால் மகிழ்வதற்கு அங்கு ஒன்றுமில்லை என்பதைப் பிறகு அறிந்தேன். தமிழர்களை ஒன்று திரட்ட  வேண்டும், பயன் தரும் எதையாவது செய்ய வேண்டும் என்பது என் எண்ணமாக இருந்தது. குறைந்தபட்சம் சமூகம் குறித்துப் பேசிக் கொள்ளவாவது தமிழர்கள் வேண்டும் என்பது என் ஆவலாக இருந்தது. 

தமிழர்கள் கிடைத்தார்களா?

கிடைத்தார்கள். பொங்கல் விழா குறித்துச் சொன்னேனே! அங்கு ஒன்றிரண்டு பேரைக் கண்டுபிடித்தேன். அவர்களுடன் நட்பு பாராட்டினேன். தொடர்ந்து என் முயற்சிக்குக் கொஞ்சம்  தமிழர்கள் கிடைத்து வந்தார்கள். இப்படியான நிலையில்தான் ஈழப்போரில் தமிழர்கள் அநியாயமாய் செத்துப் போனார்கள். என்னால் ஜப்பானில் இருக்கவே முடியவில்லை. என்றாலும் எதையாவது செய்ய வேண்டும் எனத் தவித்தேன். எனக்குத் தெரிந்த அனைத்து இணையத் தளங்களிலும் எழுதிக் குவித்தேன். பேஸ்புக், ஆர்குட் போன்ற வலைத் தலங்களையும் ஆக்கிரமித்தேன். ஆனால் நான் செய்வது போதுமானதாக இல்லை. எனினும் என் செயல்கள் எனக்கு மேலும் சில நண்பர்களைத் தேடித் தந்தது. அந்த நேரத்தில் நீயா? நானா? என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று ஜப்பானில் பதிவு செய்யப்பட்டது. அதில் நான் பேசினேன். வேறு சிலரும் பேசினார்கள். அங்கே நாங்கள் அடையாளம் தெரிந்து கொண்டு, கைக்கோர்த்தோம். இப்படியான வேளையில் தான் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் இறப்பைக் கணினி வழி காண்கிறோம். என்ன செய்வதென்றே தெரியாமல், ஆனால் செய்ய வேண்டும் என்கிற கொதிப்பு அதிகமானது. உடன் நான்கு பேர் ஒன்று சேர்ந்து, ஒன்றைச் செய்தோம். 

என்ன செய்தீர்கள் ?

ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்ற பொருளில் ஒரு விளக்க மனுவை, ஜப்பானிஷ் மொழியில் எழுதி, ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் கொடுக்கிறோம். ஒரு 0.30 நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள் என ஆசியாவிற்கான வெளியுறவுத் துறை அதிகாரியிடம்  கொண்டு விட்டார்கள். நாங்கள் பேசினோம். எல்லாவற்றையும் பேசினோம். எங்கள் தமிழர்களை ஜப்பானாவது காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டோம். அந்த அதிகாரி அனுமதித்த முப்பது நிமிடத்தில் இருந்து இரண்டு மணி நேரமாகச் சந்திப்பை நீட்டித்தார். உங்கள் நியாயம் எங்களுக்குப் புரிகிறது, ஏற்கிறோம். ஆனால் இந்தியா எதனாலோ மறுக்கிறதே என்றார். எல்லா இடத்திலும் இந்தியா இடையூறாக இருக்கிறதே என எண்ணி, இந்தியத் தூதரகம் முன்பு நாங்கள் உண்ணாநிலைப் போராட்டம் செய்ய வேண்டும் என்றோம். அவர்கள் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். அவர்களுக்குப் அதுவெல்லாம் புதிது. வலியுடன் போராடி ஒரு வழியாய் அனுமதி பெற்றோம். காலை 8 முதல் 6 முடிய என்று நிர்ணயித்து, சில நிபந்தனைகள் கொடுத்தார்கள். நாங்களும் தேதி அறிவித்து, இணைய வழி விளம்பரம்  செய்து, 30 தமிழர்களாவது கூடுவார்கள் என்று தயாரானோம். ஆனால் நூறு தமிழர்கள் உண்ணாவிரத இடத்தை நிரப்பிவிட்டனர். குடும்பத்துடன், குழந்தைகளுடன் வந்தனர். சிலிர்த்துப் போனோம். போராட்டக் கோரிக்கைகளை தமிழ், ஆங்கிலம், ஜப்பானிஷ் ஆகிய மொழிகளில் எழுதி வைத்தோம். நிறைய தமிழர்களும், ஒரு ஜப்பானியக் குடும்பமும் கையெழுத்துப் போட்டார்கள். 

இந்தியத் தூதரகம் என்ன செய்தார்கள் ?

இப்படிச் செய்வோம் என்று நினைத்திருக்கவே மாட்டார்கள். அதுவும் பெருந்திரள் உணர்வோடு! உண்ணாநிலை முடிந்து கோரிக்கைக் கொடுக்கச் சென்றோம். தூதர் இல்லை, வேறு அதிகாரியிடம் கொடுங்கள் என ஒரு பஞ்சாபியைக் காட்டிச் சென்றார்கள். அவரிடம் பேசினோம். அவர் சொன்னார். நான் ஏற்கனவே உங்கள் விசயங்களை அறிவேன். ஒரு அதிகாரியாய் உங்கள் நிலையை நான் ஆதரிக்க மாட்டேன். தனி மனிதனாய் உங்கள் பக்கம்தான் நியாயம் என்பேன் என்றார். ஜப்பான் அரசாங்கம் உண்ணாநிலை போராட்டத்திற்கு அனுமதி வழங்கியது வரலாற்று சாதனை. இளைஞர்கள் நீங்கள் சாதித்துள்ளீர்கள் என்றார்கள். 

உங்களின் பணிகளில் வேறு என்ன ?

"முழுமதி" என்கிற அறக்கட்டளையை நண்பர் ஒருவர் இயக்கி வருகிறார். அதில் அய்ம்பது பேர் அளவில் உறுப்பினர்கள். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு உதவி செய்வது அதன் நோக்கம். பள்ளிகளைத் தத்தெடுப்பது, கல்வி உதவித் தொகை வழங்குவது எனத் தொடர்கிறோம். உறுப்பினர்கள் ஆண்டுக்கு ஒரு தொகை வழங்குவோம். பிறந்த, திருமண நாள்களில் நம் தமிழர்கள் பணம் தருகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி, ஜப்பானில் புகுசிமா அணு உலை விபத்தின் போது நேரடியாகச் சென்று உதவிகள் செய்தோம். பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளிலும்  உதவி வருகிறோம். 

சீனப் பொருள்கள் ஜப்பானைப் பாதித்துள்ளதா ? 

இல்லை என்றே சொல்வேன். சாதாரண மற்றும் தொழில் நுட்பப் பொருள்களையும் ஒரு காலத்தில் ஜப்பானே தயாரித்தது. இப்போது சாதாரணப் பொருள்களை  சீனா வழங்குகிறது. அதுபோன்ற பொருள்களை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். ஆனால் தொழில் நுட்பப் பொருள்களில் ஜப்பான் மேலும் வளர்ந்தே வருகிறது. 

உலகமயத்தால் ஜப்பான்  பாதிக்கப்பட்டுள்ளதா ? 

உலகமயத்தால் ஜப்பான் பாதிக்கவில்லை. மாறாக உலகமயம் மூலம் வெற்றி பெற்ற நாடுகளில் ஜப்பானும் ஒன்று. 

ஜப்பான் மொழி ?

ஜப்பானில் "காஞ்சி" என்கிற வடிவில் 2000 எழுத்துகள் உள்ளன. ஒரு ஜப்பானிய மாணவன் 8 ஆம் வகுப்பு முடிக்கும் போதே, இந்த காஞ்சி எழுத்துக் கொண்டு அவரால் எழுத, வாசிக்க முடியும். அவ்வளவு தாமதத்திலும் அவர்கள் மொழியை விடவில்லை. ஆனால் நமக்கு இருப்பதோ 247 எழுத்துகள். அதையே படிக்க மறுக்கிறோம். ஆங்கிலம் படிப்பவர்கள் கூட, தமிழைக் கண்டிப்பாக இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டும் என்கிற நிலை வேண்டும். தமிழே தெரியாத நிலையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 


ஜப்பானியர்கள் குறித்து ? 

நிறுவனங்களிடம் தங்களை ஒப்படைத்துக் கொள்கிறார்கள். விளைவு மன அழுத்தம்.  இலக்கியம், புத்தகங்கள், திரைப்படம் குறைந்து விட்டன. அமெரிக்காவின் பண்பாட்டு ஆதிக்கம் அதிகரிக்கின்றன. ஆண்டுக்கு தற்கொலைகளின் எண்ணிக்கை முப்பதாயிரம் தொட்டுவிட்டது.  மற்றபடி உண்மைக்கும், உழைப்புக்கும் பேர் பெற்றவர்கள். மத உணர்வு என்பது மிகச் சிறியது. ஒரு தெருவில், ஒரு வீட்டில், ஒரு கண்ணாடி உடைந்தால் உடனே சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். (Broken Window Theory) 
இல்லாவிட்டால் அடுத்தடுத்த கண்ணாடிகளுக்கும் ஆபத்து வரும் என்கிறார்கள். அந்தக் கண்ணாடியை வீட்டுக்காரர் அல்லது பக்கத்து மனிதர் அல்லது வழிப்போக்கர் அல்லது அரசாங்கம் யாராவது சரி செய்ய வேண்டும். தவறினால் எல்லோருக்கும் ஆபத்துப் பரவும் என்பது அவர்களின் எண்ணம். 

பெரியார் ?

அவர்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. அடிமை மனப்பான்மையை ஒழித்தவர். மற்ற மாநிலங்களில்  ஒரு சிலர் முற்போக்குப் பேசினர். ஆனால் பெரியார் பெரிய தாக்கம் செய்தவர். திராவிடர் கழகத்திற்கு அரசியல் வேண்டாம் எனப் பெரியார் எடுத்த முடிவு வராலற்றுச் சிறப்பு மிக்க முடிவு. இயக்கம் நீர்த்துப் போகாமல் இருப்பதற்கு அது முக்கியக் காரணம். பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள் பிறழாமல் இருப்பதற்கும் தேர்தல் மறுப்பு ஒரு சிறப்பு. பெரியார் அழுத்தமாகக் கொள்கையைச் சொன்னவர் என்கிறார்கள் சிலர். அப்படிச் சொன்னதாலே இந்தளவு தமிழ்ச் சமூகம் வெற்றிப் பெற்றுள்ளது. தொடர்ந்து அக்கொள்கையை முன்னெடுத்து, சமூகத்தை மேம்படுத்துவோம். நன்றி!                                                                                                                                                                                                                                    
                                                                                                                                                                   சந்திப்பு  - வி.சி.வில்வம்           
                                                                                                                                

  

மலேசியத் தமிழர்களும்; திராவிடர் கழகமும் !

              

மலாயா! 
 
இப்படித்தான் அழைத்தார்கள் இன்றைய மலேசியாவை ! மலாயா அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. உலகின் பல நாடுகள் அவர்களின் கீழ்தானே இருந்தது. இந்தியாவும் அப்படி இருந்த நேரம். தமிழர்களைக் கூலி வேலைக்காக மலாயா அழைத்துச் சென்றார்கள் பிரிட்டிஷ்காரர்கள். தங்களின் தோட்டங்களிலும், பல்வேறு உடலுழைப்பு வேலைகளிலும் அவர்களை ஈடுபடுத்தினர். தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடு சென்ற போதும், தமிழர்களின் மன வேதனை குறையவில்லை என்பதுதான் நாம் பார்க்க இருக்கும் சோக வரலாறு.

இன்றைய மலேசியா முன்னேறிய நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. நவீனங்கள் பெருகிவிட்டன. இசுலாம் மதத்தில் ஈடுபாடு கொண்டாலும், பெரிய கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. அனைத்து மத, இன மக்களும் உரிமையுடன் வாழ்கின்றனர். குறிப்பாகத் தமிழர்கள் நல்ல வண்ணம் வசிக்கின்றனர். அரசியல் மற்றும் தொழில் துறைகளில் வெற்றிகளைக் குவிக்கின்றனர். உலகில் எந்த நாட்டிலும் காணாத வகையில், தமிழர்களின் பேச்சு மொழி தொண்ணூறு விழுக்காடு மேல் தமிழாகத்தான் இருக்கிறது. எனினும் இப்போதைய குழந்தைகள் பலர் தமிழ் எழுதவும், வாசிக்கவும் தடுமாறுகிறார்கள். ஒரு மொழி பேசுவதில் மட்டுமின்றி, எழுத்து நடையும் அவசியம் என்பார்கள். தவறும்போது மொழியும் தவறும் அபாயம் உள்ளது.

இன்றைய மலேசிய வாழ் தமிழர்கள், தமிழ்நாட்டிலே இருந்திருந்தால் இப்படியான வசதியான  வாழ்வு கிடைத்திருக்குமா என்பது அய்யமே. அதற்காக நாம் தமிழ்நாட்டைக் குறைத்து மதிப்பிடவில்லை. எனினும் வரலாற்றின் போக்கோடு சென்று ஒப்பிட்டுப் பார்க்கிறோம். சரி ! இப்படியான மலேசியத்  தமிழர்கள் அன்று எப்படி இருந்தார்கள்? 

தமிழ்நாட்டில் இருந்து அனைத்தையும் இழந்து மலேசியா சென்றார்கள். ஆனால் ஒன்றே ஒன்று அவர்களின் அனுமதி இல்லாமல் கூடவே சென்றது. ஆம்! அதுதான் அவர்களின் ஜாதி! அந்த ஜாதியும் விமானம் ஏறி சென்றதுதான் பெருங்கொடுமை. உலகில் எல்லோரையும் மனிதராகப் பார்த்தவர்கள், தமிழனை ஜாதியாகப் பார்த்தார்கள். தமிழர்களுக்கு வெளிநாடு வந்த மகிழ்ச்சி இல்லை, கூடுதல் வருமானம் என்ற இன்பம் இல்லை. மாறாக ஜாதி நோய் அவர்களைக் கொன்றுக் குதறியது. மலேசியாவிலும்  அப்படியா என்று நீங்கள் கேட்டால், ஆம் அப்படித்தான் என்பதே பதில். அந்த வரலாறுகளை இன்று நினைத்தாலும் வலி நிற்காது.

1901 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் - மலாயா அரசு ஒரு விதி (எண் - 18) வைத்தது. அதில் ,"ஒரு தொழிலாளி இந்த நாட்டில் குடி புகுந்த பிறகு, அவர்கள் சொந்த நாட்டில், அன்றாட வாழ்க்கையில் அனுசரிக்கப்பட்ட  ஜாதிப் பிரிவினை, குடி புகுந்த நாட்டில் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கக் கூடாது", என எழுதினார்கள். எப்படி இருக்கும் போனவர்களுக்கு ? வேலை எடுப்பதில் ஜாதி பார்த்தார்கள், குடியிருப்புகளைத் தனியே வைத்தார்கள், கோவிலுக்குள் விடமாட்டேன் என்றார்கள். திருமண விழாக்களில் மற்றவர்களுடன் சாப்பிடவும், வீதிகளில் காலணி அணியவும், வேட்டியை இறக்கி விடவும், தலைப்பாகைக் கட்டவும் அனுமதி கிடையாது என்றார்கள். பொது நிகழ்ச்சிகளில் பொறுப்பு ஏற்கவும் தடை விதித்தார்கள். தமிழ்நாட்டில் இருந்த எல்லாமும்  அங்கு இருந்தது. ஆனால் வாழுமிடம் மலேசியா என்பது மட்டும் மாறியிருந்தது. 

இப்படியான கொடுமைகளில் இருந்து தமிழர்களுக்கு எப்போது  மாற்றம் ஏற்பட்டது? அதை மலேசியாவின் வரலாற்றுப் பக்கங்களில் தேடினால் அது "1929" எனும் ஆண்டை நமக்கு விடையாகத் தருகிறது. அப்படி என்ன 1929 இல் நடந்தது? மலேசியத் தமிழர்களிடம் புரட்சி ஏதும் ஏற்பட்டதா? அல்லது ஆதிக்கவாதிகள் தாங்களாகவே  மாறிப் போனார்களா ? இவ்விரண்டில் எதுவும் இல்லை! அந்த ஆண்டில் தான் தந்தை பெரியார் மலேசியா சென்று இறங்குகினார். சரியாகச் சொன்னால் 19.12.1929 காலை நாகம்மையார் அவர்கள், எஸ்.இராமநாதன், சாமி.சிதம்பரனார், நடராஜன் ஆகியோருடன் "எஸ்.எஸ்.ரஜுலா" எனும் கப்பலில் பினாங்கு விக்டோரியா துறைமுகம் சென்று கால் பதிக்கிறார் பெரியார். கடலின் மூன்று மைல் தூரத்தில் கப்பல் நிறுத்தப்பட, அந்த இடத்திற்கே சென்று பெரியாரை வரவேற்கின்றனர்.           

பெரியார் வந்தது தெரியாமலும், அவர் வருவதினால் என்ன பயன் என்பது தெரியாமலும் தமிழர்கள்  கூட்டம் ஆங்காங்கே அடிமை வாழ்வு வாழ்ந்து வந்தது.  தத்தம் அடிமை வாழ்வு நீங்க இதற்கு முன்னர் அவர்கள் அழுதிருக்கக் கூடும் அல்லது முதலாளிகளை கெஞ்சியிருக்கக் கூடும் அல்லது ஆண்டவர்களை (?) அழைத்திருக்கக் கூடும். எந்தப் பயனுமின்றி போகவே, அடிமை வாழ்வைத் தொடர்ந்திருக்கக் கூடும். இதோ... பெரியார் இறங்கினார். நகரங்களுக்குப் போகிறார். பின்னர் தோட்டங்களுக்குப் போகிறார். தமிழர்கள் முன்பாகத்  தொடர்ந்து பேசுகிறார்.விளைவு, மொத்தமும் மாறிப் போகிறது. மலேசியத் தமிழர்களுக்குச்  சிரிக்கவும், சிந்திக்கவும் அதுதான் தொடக்கம்.  அவர்கள்  உடலின் பழைய  இரத்தம், புது பாய்ச்சலைக் கொடுக்க, சிலிர்த்துப்  போகிறார்கள். 

பின் நாள்களில் குடியரசு இதழ் தமிழ்நாட்டில் இருந்து விமானம் ஏறுகிறது. தினம் தினம் பெரியாரைப் படிக்க, சுயமரியாதைப் பெறுகிறார்கள். மீண்டும் பெரியார் 14.12.1954 இல் மலேசியா செல்கிறார். முதல் பயணத்தில் பெரியாரை எதிர்த்தவர்கள், ஜாதி, மதத்திற்கு வால் பிடித்தவர்கள் எல்லாம் இந்த முறை பெரியாரை  ஒன்றாய் சேர்ந்து வரவேற்க, தமிழர்கள் நிலை ஏறுமுகம் காண்கிறது. விளைவு 10.02.1946 இல் மலேசியாவில் திராவிடர் கழகம் உதயமாகிறது. மலேசியாவின் அனைத்து  மாநிலங்களிலும் தமிழர்கள் தோழர்களாக வெளிவரத் தொடங்கினர். மலேசிய சாலைகளில் கறுப்புச் சட்டைகள் அணிவகுக்கத் துவங்கின. தோட்டத் தொழிலாளர்கள், தாங்கள் பெரியார் சிந்தனையாளர்கள் என்பதை வலியுறுத்தும் பொருட்டு, கறுப்புத் துணி கட்டிக் கொண்டு வேலை செய்த நிகழ்வுகள் அரங்கேறுகிறது. அதேநேரம்  கொள்கைப் பேசியதாலே வேலையை இழந்தத் துயரங்களும் அரங்கேறின. இதனிடையே மலேசியாவில்  பல்வேறு பெயர்களில் செயல்பட்ட எண்ணற்ற அமைப்புகள் திராவிடர் கழகத்தோடு தங்களை இணைத்துக் கொண்டன.  ஒரு கட்டத்தில்  மலேசிய அரசாங்கத்தால் திராவிடர் கழகம் அங்கீகரிக்கப்படுகிறது. சுயமரியாதைத் திருமணங்களும் ஏற்கப்படுகின்றன. சுயமரியாதைப் பிரச்சாரம், கல்விப் பணி, இலக்கியப் பணி, சுயமரியாதைத் திருமணங்கள் செய்து வைத்தல், பாலர் பள்ளி, தையல் வகுப்பு, மொழி வளர்ச்சி என இயக்கப் பணிகள் இன்றைக்கு விரிவடைந்து இருக்கின்றன. இந்த அற்புதமான வரலாறுக்குப் பின்னால் அய்யாறு வாத்தியார், திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி என ஒரு நீண்ட பட்டியலே உண்டு.  

இறுதியாகத்  திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்துக் கூற வேண்டும். மலேசியாவின் ஒவ்வொரு அணுவும் அறிந்தவர் நம் ஆசிரியர் அவர்கள். மேலே எழுதப்பட்டுள்ள வரலாறு என்பது ஒரு சுருக்கம் தான். அதன் முழு வரலாறுகளையும், ஆணிவேர் வரை அறிந்தவர் தமிழர் தலைவர் அவர்கள். மலேசியாவிற்கும், ஆசிரியருக்கும் அய்ம்பது ஆண்டு கால தொடர்பு இருக்கிறது. "தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும், மலேசியத் திராவிடர் கழகமும்" என தனி நூல் எழுதும் அளவிற்கு வரலாற்றுச் செய்திகள் உள்ளன.    

முடிவாக, தமிழ்நாட்டில் மட்டுமின்றி மலேசியாவிலும் தமிழர்கள் உரிமையுடன் வாழ, "பெரியாரே அடிப்படை" என்பதோடு பதிவை நிறைவு செய்வோம்.  

வினோத நிகழ்வு !

               
சென்ற வாரம் தமுஎகச - வின் "களம்" சார்பில், திருச்சியில் பொங்கல் விழா நடைபெற்றது. நூல் வெளியீடு, கவியரங்கம், உரையரங்கம் என ஏகப்பட்ட நிகழ்வுகள்.  ச.தமிழ்ச்செல்வன், நந்தலாலா உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர். என்றுமே இல்லாத வகையில், அன்று  நான் முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன். நிகழ்ச்சியின் முந்தைய நாளிரவில், அறவே தூங்காமல் இருந்திருந்தேன். எனவே நிகழ்ச்சி நடைபெறும் போது, முதல் வரிசையில் நன்றாகத் தூங்கியிருக்கிறேன்.               

இதை மேடையில் இருந்து  கவனித்த நந்தலாலா, என் அருகில் இருந்த ஒரு பத்திரிகை நண்பரிடம், "வில்வத்தை எழுப்புங்கள்" என சைகை மொழி பேசியிருக்கிறார். ஆனால் நண்பரோ அதைப் புரிந்து கொள்ளவில்லை. நானோ தொடர்ந்து தூங்குகிறேன். என்ன செய்வதென்று நந்தலாலாவுக்குப்  புரியவில்லை.  

அப்போதுதான் அந்த வினோத நிகழ்வு நடந்தது. நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த என்னை யாரோ உலுப்புவது போல் இருந்தது. பதறியடித்து கண் விழித்தேன். என்னருகில் இருந்த பத்திரிகை நண்பர், "வில்வம் உன்னை மேடைக்கு அழைக்கிறார்கள், போ !" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னை எதற்கு மேடைக்கு அழைக்கிறார்கள்? நானோ இன்னும் தூக்கம் கலையாமல் இருக்கிறேன்.

இருப்பினும் சுதாரித்துக் கொண்டு மேடைக்குப் போனேன். நந்தலாலா என்னை அழைத்து, கையில் 10 புத்தகங்களைக் கொடுத்து, மேடையில் இருக்கிற எல்லோரிடமும் இந்த நூலைக் கொடு என்றார். ஒன்றுமே புரியாமல், எல்லோரிடமும் வரிசையாக நூலைக் கொடுக்கிறேன். அதை ஒளிப்படம் வேறு எடுத்தார்கள். ஏதோ...அந்த நூலை நான் வெளியிடுவது போல. எல்லாம் முடிந்து  கீழே வந்துவிட்டேன்.

பிறகுதான் எனக்கு எல்லாமே  புரிந்தது. என்னை உசுப்பிவிட வேண்டும் என்பதில் நந்தலாலா தீர்மானமாக இருந்துள்ளார். நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் கூறி, வில்வத்தை மேடைக்கு அழையுங்கள் எனக் கூறியுள்ளார். அவரும் கூப்பிடுகிறார்... கூப்பிடுகிறார்... நான் போகவில்லை. நான்தான் தூங்கிக் கொண்டிருக்கிறேனே! பிறகுதான்  பக்கத்தில் உள்ளவர், உலுப்பி எழுப்பியுள்ளார். வெளியிடப்பட்ட நூலை  எல்லோருக்கும் "சும்மாச்சுக்கும்" கொடுக்கச் சொல்லி, நந்தலாலா என் தூக்கத்தை   நிறுத்தியுள்ளார். அந்த நேரத்தில் எனக்கு வருத்தமும், வெட்கமும் இருந்தது. ஒரு வாரம் ஆனதால், இதைப் பதியத் தோன்றியது.                       


                                      

மண வாழ்வுக்கு மன்றல் !

வணக்கம் !

"வாழ்க்கைக்குத்  துணை வேண்டும்"
என்பது உங்கள்
 தேடலாக  இருக்கலாம்.

உங்களுக்கு 
"மன்றல்" வாழ்த்துகள்!

வாழ்த்துகள்  மட்டுமல்ல...                                 
                                                                                          
வாய்ப்புகளும்  உண்டு.

பெரியார் சுயமரியாதை
திருமண நிலையத்தின்
"மன்றல் !"

இந்த வாய்ப்புகளை
சென்னையில்,
திருச்சியில்,

மதுரையில்,
நெல்லையில்
வழங்கியது.

மீண்டும்
சென்னைக்கு வருகிறது.

பிப்ரவரி 23 ஞாயிறு,
பெரியார் திடல்.

காலை 9 முதல்...
சாயங்காலம் 5 வரை. 

உங்களுக்கு,
உங்கள் பிரியமானவர்களுக்கு,

துணைவரை இழந்தோம்
என்போருக்கு,

பிரிந்தோம்
என்போருக்கு,

மாற்றுத் திறனாளி
நண்பர்களுக்கு...

அனைவருக்கும்
வாய்ப்புகள்.

ஜாதிப் பிரிவுகள் இல்லை.
மதப் பிரிவுகள் இல்லை.

எல்லோரும் கூடலாம்
இயன்றவரைத்  தேடலாம்.

பொறுமையாய்ப் பார்க்கலாம்
பொருத்தமாய் இணையலாம்.

நிகழ்ச்சிக்கு
வணிக நோக்கம் இல்லை,
மனித நோக்கம் உண்டு.

ஒரே ஜாதியில்  
பணக்காரர் ஒரு ஜாதி
ஏழை ஒரு ஜாதி.

மன்றலுக்கோ ஜாதியும் இல்லை.
ஜாதிக்குள் ஜாதியும் இல்லை .

அனைவரையும்
அழைக்கிறோம்...

வாருங்கள்

வாய்ப்புகளை
வசப்படுத்துங்கள் !

மீண்டும்
வாழ்த்துகள் !