Sunday, December 28, 2014

ரஜினி !

இந்து மத நம்பிக்கைகள் போல, ரஜினி என்கிற மூட நம்பிக்கையாலும் தமிழர்கள் இழந்தது அதிகம்.

மதிப்பிற்குரிய மருத்துவர்!

மதிப்பிற்குரிய குழந்தைகள் நல மருத்துவர்
செங்குட்டுவன் அவர்களுக்கு வணக்கம்!
எங்கள் மகள் "கியூபா" வுக்கு இரண்டு வயது முதல் நீங்கள் தான் மருத்துவர். அப்போது தென்னூர் மருத்துவமனையில் இருந்தீர்கள். எனக்கு யாரும் உங்களை அறிமுகம் செய்து வைக்கவில்லை. நானாக என் தேடலில் உங்களைப் பெற்றேன்.
அப்போது முதல் மதிப்புக் குறையாமல் மனதில் இருக்கின்றீர்கள்!
அதே அணுகுமுறை, கனிவான பேச்சு, உறுதியான நம்பிக்கை, இதழோர சிரிப்பு என அத்தனை அம்சங்களும் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்கின்றன. நோய்கள் சரியாக இந்த அம்சங்களும் தேவை என்கிறது மனோவியல்.
நல்ல அம்சங்களைக் கொண்ட மனிதர்கள் குறைந்து வரும் வேளையில், அப்படியாக இருப்பவர்களுக்கு நாம் நம் வாழ்த்துகளைப் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலே இக்கடிதம். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கூட இதேபோன்று வாழ்த்தும் சந்தர்ப்பம் பெற்றேன்.
ஏராளமான மனிதர்களின் நினைவுகளில் நீங்கள் இருக்கின்றீர்கள்! அவர்கள் சார்பாகவும் என் எழுத்துகள் உங்களுக்கு நன்றி சொல்லட்டும்!

முற்போக்காளர்கள் வசம்!

மோடியின் ஒவ்வொரு வெற்றியும் முற்போக்காளர்களுக்குத் தோல்வி! அது பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் என அனைத்துக்கும் பொருந்தும். நாம் தாம்   எப்போதும் எதிர்க்கிறோமே என்பது இங்கு பதில் இல்லை. அவர்களின்  ஒவ்வொரு வளர்ச்சியும் நமக்கான கேள்வி. 

சூத்திர மோடியைத் தலைவனாக ஏற்று, பார்ப்பனர்கள் சாதிக்கின்றனர். மோடிக்கு, காங்கிரஸ் பரவாயில்லையோ எனச் சிலர் யோசிக்கின்றனர். ஏதோ ஒரு வகையில் இருவரும் தமிழரைச் சிதைக்கின்றனர்.

மத்தியில் எவர்  வந்தாலும் தமிழ்நாட்டை எதுவும் செய்ய முடியாது என்கிற  நிலை வேண்டும். அதற்கேற்ற அரசியல் அமைப்புகள்  வர வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாடு முற்போக்காளர்கள் வசம் வர வேண்டும்!      

மனிதனைக் கொல்லும்!

இந்து வெறி, இந்துக்களைக் கொல்லும்.
இசுலாம் வெறி, இசுலாமியர்களைக் கொல்லும்.
கிறிஸ்துவ வெறி, கிறிஸ்துவர்களைக் கொல்லும்.
ஆக மதம் மனிதனைக் கொல்லும்!

வேர்களை வெட்டுங்கள்!

பாஜக, ஆர்.எஸ்.எஸ், மோடி வகையறாக்கள் இந்து மதம் என்ற பெயரில் பல வன்முறைகள் செய்கின்றனர். இதைக் கண்டிக்கும் பலர், பார்ப்பனர்களை (பிராமணர்களை) ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.  பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து மதம் ஆகியவற்றை உருவாக்கியவர்கள் பார்ப்பனர்கள். அந்தப் பார்ப்பனீயத்தை ஒழிக்காதவரை இந்தியாவிற்கு அமைதி கிடைக்காது.
ஒரு நச்சு மரத்தின் வேர்கள் பார்ப்பனர்கள். அதன் கிளைகள் நம்மவர்கள். கிளைகளை மட்டுமே அகற்ற நினைக்கும் நாம், வேர்களை வெட்டுவது எப்போது?

முதல் அடி!

கடவுள் உண்டு என்கிற தமிழனும், இல்லை என்கிற தமிழனும் அடித்துக் கொள்கிறான். கடவுளை உண்டாக்கிய பார்ப்பனர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

மதத்தை ஆதரிக்கும் தமிழனும், வெறுக்கும் தமிழனும் அடித்துக் கொள்கிறான். மதத்தை உண்டாக்கிய பார்ப்பனர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

ஜாதியில் ஈடுபாடு உள்ள தமிழனும், ஜாதியை ஒழிக்க நினைக்கும் தமிழனும் அடித்துக் கொள்கிறான். ஜாதியை உண்டாக்கிய பார்ப்பனர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்- இல் இருக்கும் தமிழனும், பெரியார் அமைப்பில் இருக்கும் தமிழனும் அடித்துக் கொள்கிறான். ஆர்.எஸ்.எஸ் - யை உண்டாக்கிய பார்ப்பனர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

உலகிலேயே இப்படி ஒரு கொடுமை எந்த இனத்திற்காவது உண்டா?

Saturday, December 27, 2014

கீதையில் என்ன இருக்கிறது?

கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே! எனக் கீதையில் இருப்பதாகக் கூறுகின்றனர். 700 க்கும் மேற்பட்ட சுலோகங்களில் ஒன்றில் கூட அப்படிக் கிடையாது. வேறு என்ன இருக்கிறது?
நால்வருணம் கொண்ட மக்கள், தத்தம் குலத்தொழிலைச் சரியாகச் செய்ய வேண்டும். அதற்குக் கூலியை எதிர்பார்க்கக் கூடாது என்றுதான் கீதையில் உள்ளது. ஆனால் வள்ளுவரோ...
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி - தன்
மெய் வருத்தக் கூலி தரும் என்கிறார்.
உன் உழைப்புக்குக் கண்டிப்பாய் ஊதியம் உண்டு என்கிறார் வள்ளுவர். நீ என்ன உழைத்தாலும் உனக்கு ஊதியம் கிடையாது என்கிறது கீதை. இப்போது சொல்லுங்கள் தேசிய நூலா கீதை?

அறிவால் முட்டாள்கள்!

கங்கைஅமரன், இளையராஜா இருவரும் இசையால் மேதைகள். அறிவால் முட்டாள்கள். பார்ப்பனத் தன்மையோடு, பார்ப்பன அடிமையாய் வாழ்பவர்கள். ஏற்கெனவே இந்துத் தர்மப்படி இவர்கள் அடிமை ஜாதி. மேலும் தங்கள் ஜாதியைக் கேவலப்படுத்தும் வேலைகளை இவ்விருவரும் தொடர்ந்து செய்கிறார்கள். ஒரே வரியில் சொல்வதானால் தமிழினத் துரோகிகள்!

ஆச்சார்யம்!

கொலை செய்தவனுக்குச் சிலை வைப்பதில் என்ன ஆச்சர்யம்? அது ஆச்சார்யம் - கோட்சே 

எங்கள் கொள்கை!

பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுபவர்கள் குறைவு", என்கிறான் நண்பன். இருந்துவிட்டுப் போகட்டும்! எங்கள் வீட்டுத் திருமணங்களுக்கு மண்டபகங்கள் சுலபமாகவும், நாங்கள் துணி எடுக்கச் சென்றால் கடைகள் காலியாகவும் இருக்கின்றன.
எங்கள் கொள்கை எங்களுக்கு எந்தச் சிரமமும், நெருக்கடியும் கொடுப்பதில்லை

புத்திசாலி!

நான் ஒரு முட்டாளுங்க.. நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க.. நான் ஒரு முட்டாளுங்க.. என இரவு 10 மணிக்குப் பாடிக் கொண்டிருந்தேன். எட்டு வயது கியூபா, "நல்லா படிச்ச நாலு பேரு சொன்னா நீ முட்டாள் ஆயிருவியா எனக் கேட்டார்? நான் முட்டாளா இல்லையா என்பது இங்க பிரச்சினை இல்ல.. நல்லா படிச்ச நாலு பேரு புத்திசாலி இல்லைங்கிறது கியூபாவுக்குத் தெரிஞ்சிருக்கு.

மக்கள் மகிழ்ச்சி!

அமெரிக்காவும், கியூபாவும் ஒன்று சேர்வதாய் செய்திகள் வருகின்றன. அடாவடியை அமெரிக்கா குறைத்துக் கொண்டதா? இல்லை... சுயமரியாதையைக் கியூபா சுருக்கிக் கொண்டதா? ஆச்சர்யம் எப்படியும் இருக்கட்டும். உலகம் அமைதியானால், மக்கள் மகிழ்ச்சியாவர்!

தமிழக வீழ்ச்சி!

தமிழர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கட்சிக்கு அல்லது நடிகருக்குத் தங்களை எழுதி வைத்து விடுகிறார்கள். தான் சாகிறவரை தன் கட்சியையோ, நடிகரையோ சாகவிடுவதில்லை. தமிழர்களின் பொதுத் தன்மையற்ற, இந்தச் சார்புத் தன்மைதான், தமிழகத்திற்குப் பெரும் வீழ்ச்சி!

நடிங்க பாஸ்!

கொஞ்சம் நடிங்க பாஸ்!
"அதிதீவிர கருத்துகளை ஆர்.எஸ்.எஸ்.பேசினால் பிரதமராக நீடிக்க மாட்டேன்"- மோடி        
அட்ரா சக்கை... அட்ரா சக்கை.. அட்ரா சக்கை...

மோடி

இந்தியாவில் அதிகம் பேசப்படும் மனிதராக மோடி இருக்கிறார் - தினமலர்
உண்மைதான்! ஒரு கொலைகாரர் பிரதமராக வந்துவிட்டாரே என்பது கூட தினமும் பேசப்படுகிறது                

ஜாதிச் சனியன்!

மும்பைத் தாராவி பகுதிக்குக் காமராஜர் அவர்கள் பேசச் சென்றுள்ளார். அவர் பேசுவதற்கு முன், நாடார் மகாஜன சங்கம், ஆதி திராவிட மகாஜன சங்கம், தேவேந்திர சங்கம், நாயுடு சங்கம், முதலியார் சங்கம், விஸ்வகர்மா சங்கம் என வரிசையாக மாலை அணிவிக்க, காமராஜர் எரிச்சல் அடைந்து, "இந்த ஜாதிச் சனியன்களை சென்ட்ரல் ஸ்டேசனிலே மூட்டைக் கட்டி விட்டுறக்கணும்" என்றாராம். (நன்றி - தமிழ் லெமூரியா)

நீயா? நானா?

திருச்சியில் செய்தியாளர்கள் சிலர், இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிறார்கள். ஒரு காவலர், அவர்கள் செய்தியாளர்கள் எனத் தெரியாமல் மறித்து, வண்டியில் இருந்த சாவியை எடுத்துச் சென்றுவிட்டார். செய்தியாளர்களுக்குக் கோபம். வண்டியை சாலையின் நடுவிலே நிறுத்தி விட்டார்கள். போக்குவரத்து நெருக்கடி கூடிவிட்டது. சாவியை எடுத்த காவலர் தூரத்தில் இருந்து கத்துகிறார். இவர்களோ வண்டியை எடுக்காமல், காவலரை இங்கே வா என அழைக்கின்றனர். அப்போது அங்கே வந்த வேறு ஒரு காவலர், இவர்கள் செய்தியாளர்கள் என அறிந்து பிரச்சினையை முடித்து வைக்கிறார். ஏன் சாவியை எடுத்தீர்கள் என்றதற்கு, தலைக்கவசம் அணியவில்லை என்றாராம் காவலர். அதற்கு சாவியை எடுத்துக் கொண்டு, ஏன் அறைக்கு ஓடினீர்கள். காசு வாங்கவா? என்றார்களாம் செய்தியாளர்கள். திருச்சி பிரஸ் கிளப் வழங்கும் "நீயா? நானா? பிராட் யு பை ட்ராபிக் போலீஸ் ஸ்டேஷன்.

பெரியார்!



ஆர்.எஸ்.எஸ்.நோய்க்கான
ஒரே அறுவைச் சிகிச்சை
மருத்துவர்!



Friday, December 26, 2014

வேறு எப்படி?

பாலசந்தர் இறுதி நிகழ்ச்சியை கேலிக் கூத்தாக்கிய ரசிகர்கள் - நீங்க உருவாக்கிய ரசிகர்கள் வேறு எப்படி இருப்பார்கள்?

வழி நடத்துங்கள்!

பிரபலமான பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் நல்ல கருத்துகளை முகநூலில் பதிவது இல்லை. மாறாகத் தம் புகைப்படங்கள், பங்கேற்கும் நிகழ்வுகள், சென்னை சென்றேன், சேலம் போவேன் என்கிற தகவல்களே உள்ளன. அதற்கு அய்நூறு விருப்பங்கள் வேறு. முன்னுரிமைக் கருத்துக்கா? முகத்துக்கா? தெரியவில்லை. எனவே பிரபலங்கள் நல்ல கருத்துகளைப் பதிவிட்டு, தமிழ் இளைஞர்களை வழி நடத்த வேண்டும்.

Tuesday, December 16, 2014

வாழ்வின் அழகு!


எத்தனை உடை இருந்தென்ன ?
கருப்புடை வாழ்வை அழகாக்கும்
வாழ்க பெரியார் !

முதல்வரே!

நடிகர் கமலஹாசன் பிறந்த நாளையொட்டி திருச்சியில் ஒரு சுவரொட்டி. "நடிகர்களின் முதல்வரே!" ஏற்கெனவே இங்கு "மக்களின் முதல்வரே" என்பது ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படியே தொடர்ந்தா என்னாகும்? உலகத் தீவிரவாதத்தின் முதல்வர் அமெரிக்காவே! இந்துத் தீவிரவாதத்தின் முதல்வர் பார்ப்பனர்களே! குடிப்போன நாட்டில், குடிகெடுப்பதில் முதல்வர் சுப்பிரமணிய சாமியே! என்றல்லவா போய்க் கொண்டிருக்கும்?

மருத்துவமனைத் தள்ளுபடி!

எனது உறவினர் ஒருவருக்குத் திருச்சி மாருதி மருத்துவமனையில் ஒரு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அவர் ஒரு அரசு ஊழியர். அந்தச் சிகிச்சைக்கு ரூ.28,000 மட்டுமே பெற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசும், மருத்துவமனை நிருவாகமும் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். ஆனால் மருத்துவமனைக் கேட்ட தொகை 82,000 ரூபாய். இந்த ஒப்பந்தம் குறித்து அறிந்த என் சகோதரர், மருத்துவமனை நிருவாகத்திடம் நியாயம் கேட்டுள்ளார். அவர்களோ அசரவில்லை. பின் கேட்க வேண்டிய விதத்தில் கேட்கவும், நேராக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, நீங்கள் 28,000 மட்டும் செலுத்துங்கள். போதும் என்றார்களாம். நியாமான தொகை 28,000. அவர்கள் கேட்டது 82,000. அதிக வித்தியாசம் இல்லை. வெறும் 54,000 ரூபாய் மட்டுமே அதிகம் கேட்டுள்ளார்கள். இதை இன்னொரு விதத்தில் சொன்னால் என் சகோதரருக்கு ரூபாய் 54,000 தள்ளுபடி. எங்குமே கிடைக்காத நவம்பர் மாதத் தள்ளுபடி !

பகத்சிங் ஆசை!




 
பகத்சிங்கிடம் தூக்கிலிடும் முன், ஏதாவது ஆசை இருக்கிறதா என்று கேட்டார்கள். "பேபி" கையால் ரொட்டி சாப்பிட வேண்டும் என்று பகத்சிங் கூறினார். சிறைக்காவலர் அதிர்ந்து போனார். காரணம் பேபி என்ற பெண்மணி சிறையில் மலம் அள்ளுபவர். பகத்சிங் உறுதியாய் இருக்க, பேபி அழைத்து வரப்பட்டார். "நான் மலம் அள்ளுபவர். ரொட்டி தயார் செய்து தர மாட்டேன்", என பேபி கூறுகிறார். "என் தாயும் மலம் அள்ளுகிறார். அதற்காக என் தாயின் கைகளில் சாப்பிடாமல் இருக்கிறேனா? ஒரு பிள்ளையின் மலம் அள்ளுகிறவரே தாய் என்றால், ஊரார் பிள்ளைகளின் மலத்தை அள்ளும் நீங்கள் தாயின் மேலானவர் என்கிறார் பகத்சிங். பெரியாரியமும், கம்யூனிசமும் இப்படியான இளைஞர்களைத்தான் தோற்றுவித்தது.

மதிப்பிற்குரிய குழந்தைகள் நல மருத்துவர்!

மதிப்பிற்குரிய குழந்தைகள் நல மருத்துவர்
செங்குட்டுவன் அவர்களுக்கு வணக்கம்!

எங்கள் மகள் "கியூபா" வுக்கு இரண்டு வயது முதல் நீங்கள் தான் மருத்துவர். அப்போது தென்னூர் மருத்துவமனையில் இருந்தீர்கள். எனக்கு யாரும் உங்களை அறிமுகம் செய்து வைக்கவில்லை. நானாக என் தேடலில் உங்களைப் பெற்றேன்.

அப்போது முதல் மதிப்புக் குறையாமல் மனதில் இருக்கின்றீர்கள்!
அதே அணுகுமுறை, கனிவான பேச்சு, உறுதியான நம்பிக்கை, இதழோர சிரிப்பு என அத்தனை அம்சங்களும் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்கின்றன. நோய்கள் சரியாக இந்த அம்சங்களும் தேவை என்கிறது மனோவியல்.

நல்ல அம்சங்களைக் கொண்ட மனிதர்கள் குறைந்து வரும் வேளையில், அப்படியாக இருப்பவர்களுக்கு நாம் நம் வாழ்த்துகளைப் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலே இக்கடிதம். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கூட இதேபோன்று வாழ்த்தும் சந்தர்ப்பம் பெற்றேன்.
ஏராளமான மனிதர்களின் நினைவுகளில் நீங்கள் இருக்கின்றீர்கள்! அவர்கள் சார்பாகவும் என் எழுத்துகள் உங்களுக்கு நன்றி சொல்லட்டும்!

நன்றி!
வி.சி.வில்வம்

Wednesday, December 3, 2014

தலித்துகளின் எதிரி பெரியாரா? கடவுளா?


 தலித்துகளின் எதிரி பெரியாரா? கடவுளா? எனத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா கேள்வி எழுப்பினார்.  ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 82 ஆம் ஆண்டு பிறந்த நாள் கூட்டத்தில், "தத்துவத் தலைவரின் சிந்தனைக் கொள்கலன்" என்ற தலைப்பில் நந்தலாலா பேசியதாவது: 

வீரமணி என்கிற ஓவியம்!

ஆசிரியர் அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு உண்டு. என்னைப்  பிடித்தது அவரின் எளிமை. வீரமணி என்கிற "ஓவியம்" வரைந்த போது பார்த்தவர்கள் இங்குண்டு.  சற்று நெருக்கமாகப் பார்ப்பவர்களும் இப்போதுண்டு. நான் சற்றுத் தள்ளிப் பார்க்கிறேன். தள்ளியிருந்துப் பார்க்கையில் அந்த ஓவியம் பேரழகாய்த் தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன் மலேசியாவின் ஈப்போ நகரில்  நடைபெற்ற தமிழர் மாநாட்டில் அவரைச் சந்திக்கிறேன். அவரின் பேச்சு,அணுகுமுறை என்னை வெகுவாக ஈர்த்தது. தொடர்ந்து பேசுகையில், உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். குரலைப் பாதுகாக்க என்ன செய்கிறீர்கள் என்று  கேட்டேன். எதுவும் செய்வதில்லை என்றார். அதனால்தான் அவரின் குரல் நன்றாக இருக்கிறது. ஒரு சிலரின் பேச்சில் கருத்துகள் நன்றாக இருக்கும், குரல் சரிவராது. ஆனால் ஆசிரியர் பேச்சை இரண்டு, மூன்று மணி நேரம் கூட  கேட்கலாம். திருச்சியில் 30 ஆம் தேதி நடைபெற்ற " சாமியார்கள் ஜாக்கிரதை" என்கிற அவரின் பேச்சைக் கேட்டேன். நிறைய பேச்சாளர்கள் படிப்பதே இல்லை. அரசியல் தலைவர்களோ எல்லா மேடையிலும் ஒரே மாதிரி பேசுவார்கள். ஆனால் ஆசிரியரோ முற்றிலும் வேறுபட்டவர்.   


நானும், நண்பரும் வியந்த சம்பவம்! 

திருச்சியில் மோடி கலந்து கொண்ட கூட்டதிற்கு எதிர்வினையாக திராவிடர் கழகம் சார்பில், கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.அதில் நானும் பங்கேற்றேன். அக் கூட்டத்திற்கு மார்க்சிய அறிஞர் ஒருவரும் பார்வையாளராக  வந்திருந்தார். ஆசிரியர் பேசுகையில். ஒரு நூலை எடுத்து மேற்கோள் காட்டிப் பேசினார். அது எந்த நூல் என்று நான் பார்த்து முடிக்கையில், அசந்து போயிருந்தேன். ஆம்! அது தேவபேரின்பன் எழுதிய தமிழும் சமஸ்கிருதமும் - பொய்யும், மெய்யும் என்ற நூலாகும். நான் மகிழ்ச்சியோடு என் எதிரில் இருந்த அந்த மார்க்சிய நண்பரைப்  பார்க்கிறேன். அவரும் தன்னிச்சையாய் என்னை பார்க்கிறார். நாங்கள் சிரித்துக் கொண்டோம்.காரணம் அந்த நூலை வெளியிட்டவரே அவர்தான். தமிழ்நாட்டில் வெளிவருகிற பெரும்பாலான நூல்களை இயக்கம் கடந்து வாசிப்பவராக ஆசிரியர் இருக்கிறார். அவரின் பரந்த வாசிப்புத் திறன் எங்களை வியக்க வைத்தது. 

படித்த ஆசிரியர்! படிக்கின்ற ஆசிரியே!

ஆசிரியரின்  ஒரு கூட்டம், பத்து நூல்களுக்குச் சமம் என்பேன்.  பொதுவாகப் படித்த ஆசிரியரிடம் மாணவர்கள் படிக்கக் கூடாது என்பார்கள். படிக்கின்ற ஆசிரியரே மாணவர்களுக்குச் சிறந்தவர். நம் நாட்டில் குழந்தைகளை அவமானப்படுத்தும் கல்வி முறைதான்  இருக்கிறது. மதிப்பெண் கல்வி உலகம் முழுவதும் நீக்கப்பட்ட பின்னரும், இந்தியாவில் தொடர்கிறது. எதிர்காலத்தில்  மாணவர்கள் மதிப்பெண் வழங்கி, ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆசிரியருக்கு முன் மதிப்பிழந்த கோடிகள்!

ஆசிரியரின்  கொள்கை நேர்மைக்குச் சான்றாக மேலும் ஒரு செய்தி அறிந்தேன். ஆசிரியர் அவர்களின் மாமனார் இறந்த போது அவருக்கு கொள்ளி வைக்கச் சொன்னார்களாம். அப்படி செய்யாவிட்டால் பல கோடி ரூபாய்  சொத்துகளை இழக்க நேரிடும் என்று கூறப்பட்டதாம். இறுதியில் ஆசிரியருக்கு முன்னால் கோடிகள் மதிப்பிழந்து போனதாய் அறிந்து மகிழ்ந்தேன். அதேபோல ஜீவா அவர்களின் குல வழக்கப்படி, அவர்களின் சமூக ஆடை அணிந்து கொள்ளி வைக்க வேண்டும் என்று கூறினார்களாம். கதராடை இழந்து எதையும் செய்ய மாட்டேன் என அவர் உறுதியாக இருந்த வரலாறு இங்குண்டு. இவைகள் இப்போது அல்ல, அந்தக் காலத்திலே நடந்தவை என்பதுதான் வியப்பு. 

நாம் ஒன்றாய் இல்லை!

இப்படியான புரட்சிகள் விதைந்த மண்ணில் வேரூன்ற நினைக்கிறது பாரதீய ஜனதா. காங்கிரஸ் கட்சியில், தலைவர்களைக் கொண்டு தத்துவங்கள் மாறும். ஆனால் பாரதீய ஜனதாவில் எல்லோருக்கும் ஒரே கொள்கை. மனிதனை மனிதனாக மதிக்க மாட்டோம் என்கிற கொள்கை. அய்.ஏ.எஸ். படிப்புக்கு வயதைக் குறைத்து விட்டார்கள். கேட்டால் தகுதி போதவில்லை என்கிறார்கள். அம்பேத்கர் கேட்டார், "தகுதியுள்ளவனே ஆள வேண்டும் என்றால் வெள்ளைக்காரன் அல்லவா ஆளவேண்டும்? இங்கே ஆள்வதற்கு தகுதி அல்ல, உரிமையே முக்கியம் என்றார்". பெரியார், அம்பேத்கரை எல்லோரும் ஏன் பின்பற்றுகிறோம்? அவர்களின் கருத்துகள் அனைத்தையும் படித்து முடித்துவிட்டா பாராட்டுகிறோம்? மாறாக சூத்திரன் என்கிற குடையின் கீழ் பெரியாரும், தலித் என்கிற குடையின் கீழ் அம்பேத்கரும் இந்த மக்களை ஒன்று சேர்த்தார்கள். இன்றைக்குப்  பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் அதிகம் பேசி வருகிறது. எங்கிருந்து வந்தது இதற்கான தைரியம்? நாம் ஒன்றாய் இல்லை என்பதில் இருக்கிறது அவர்களின் தொடக்கம்.  தருண் விஜயை தமிழ்நாட்டில் சிலர் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு என்ன தேவையோ நமக்குத் தெரியாது. இன்னும் ஒருவர் திருக்குறள் "ஹிந்து" மதத்திற்குச் சொந்தம் என்கிறார். நால்வருணம் பேசிய ஹிந்து மதமும், பிறப்பொக்கும் எல்லா உயிர்கட்கும் என்று சொன்ன குறளும் எப்படி ஒன்றாகும்? இந்தச் சூட்சமம் அறிந்த ஆசிரியர் அறிவியல் பூர்வ மறுப்பை விடுதலையில் சிறப்பாகப் பதிவு செய்தார்.

பகவத்கீதை படித்தவர் யார் ?
"எதைக் கொண்டு வந்தாய் எடுத்துச் செல்ல" என நிறைய உணவகங்களில் எழுதி வைத்துள்ளார்கள். நாமும் சாப்பிட்டு முடித்து, இந்த சுலோகத்தைச் சொன்னால் விட்டு விடுவார்களா? அதேபோல கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்று கீதையில் இருப்பதாகக் கூறுகிறார்கள். இவை எதுவுமே கீதையில் இல்லை என்பதுதான் உண்மை. கீதையைப்  படிக்காமலே பலரும் பேசி வருகிறார்கள். ஆனால் ஆசிரியர் அவர்கள் கீதையைப் படித்து, அறிவுசார் மறுப்பு நூலை வெளியிட்டடார். அதற்கான தகுதியும் அவருக்கே உண்டு. வேறெந்த அரசியல் தலைவர்களும் இதைச் செய்ய முடியாது; செய்யவும் மாட்டார்கள். பெரியார் இல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பது ஒருபுறம் இருக்க, பெரியாருக்குப் பிறகு ஆசிரியர் இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?  

தலித்துகளின் எதிரி பெரியாரா? கடவுளா?

பெரியார் தலித் மக்களின் எதிரி என்று தலித் தலைவர்கள் சிலர்  சொல்கின்றனர். ஜாதி என்பது கோபுரம் போன்ற அமைப்பாகும். அடித்தட்டில் இருந்து மேல் வரை நாம் இருக்கிறோம்.  கலசமாகப் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்.  ஏன் தலித் இருக்கிறது? ஜாதி முறை இருக்கிறது. ஜாதி ஏன் இருக்கிறது? இந்து மதம் இருக்கிறது.  இந்து மதம் ஏன் இருக்கிறது? சாஸ்திரம் இருக்கிறது. சாஸ்திரம் ஏன் இருக்கிறது? கடவுள் இருக்கிறார். இப்போது கடவுளை ஒழித்துப் பாருங்கள். ஜாதியும், தலித்தும் சேர்ந்தே ஒழியும். பெரியார் கொள்கை மட்டுமே அறிவியல் பூர்வமான நாத்திகம் என்பதை நாம் உணர வேண்டும். பகத்சிங்கை தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்தவர்  பெரியார். தூக்கிலிடும் முன், ஏதாவது ஆசை இருக்கிறதா என்று பகத்சிங்கிடம் கேட்டார்கள். பேபி கையால் ரொட்டி சாப்பிட வேண்டும் என்று பகத்சிங் கூறினார். சிறைக்காவலர் அதிர்ந்து போனார். காரணம் பேபி என்ற பெண்மணி சிறையில் மலம் அள்ளுபவர். பகத்சிங் உறுதியாய் இருக்க, பேபி அழைத்து வரப்பட்டார். "நான் மலம் அள்ளுபவர். ரொட்டி தயார் செய்து தர மாட்டேன்", என பேபி கூறுகிறார். "என் தாயும் மலம் அள்ளுகிறார். அதற்காக என் தாயின் கைகளில் சாப்பிடாமல் இருக்கிறேனா? ஒரு பிள்ளையின் மலம் அள்ளுகிறவரே தாய் என்றால், ஊரார் பிள்ளைகளின் மலத்தை அள்ளும் நீங்கள் தாயின் மேலானவர் என்கிறார் பகத்சிங். பெரியாரியமும், கம்யூனிசமும் இப்படியான இளைஞர்களைத்தான் தோற்றுவித்தது. 

தமிழ்நாட்டில் இன்று தத்துவ வறட்சி ஏற்பட்டுள்ளது. அதைப் போக்கும் தகுதி ஆசிரியருக்கு உண்டு. இந்தியாவில் ஒவ்வொரு  மனிதனும் ஒரு சாமியாராக இருக்கிறான்.  கால் சாமியார்,  அரைச் சாமியார், முக்கால் சாமியார் என விழுக்காடு அளவில் வித்தியாசம் இருக்கிறது. இவர்கள் எல்லோரும் சேர்ந்து முழு (?) சாமியாரைக் கொண்டாடுகின்றனர். இன்றைக்கு  மூடநம்பிக்கைகள்  நவீனம் கொள்கின்றன. பெரியார் அரசியல் கட்சி நடத்தியவர் இல்லை. கல்வி என காமராஜர் எழுத, பெரியார் எனும் கரும்பலகைத்  தமிழ்நாட்டில் இருந்தது. இந்தியாவில் எங்குமே காண முடியாத சிறப்புகள் தமிழ்நாட்டிற்கு  உண்டு. அந்தச் சிறப்பை இந்த இயக்கம் காக்கும்; ஆசிரியர் காப்பார். அதற்காகவே இந்த பிறந்த நாள் பாராட்டுகள்'', என கவிஞர் நந்தலாலா பேசினார்.  
                                                                                                                                                                  
வி.சி.வில்வம் 

Wednesday, November 12, 2014

நாங்கள் தேவகோட்டை ! எங்கள் கால்கள் நாட்டியம் ஆடுகின்றன!

"முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வையுங்கள். அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை" என்பார்  நார்மன்.  தேவகோட்டை பதிப்பாளர் சங்கத்தின்  "அடி" கொஞ்சம் பெரியதாகவே  இருக்கிறது. 

"தேவகோட்டை பதிப்பாளர் சங்கம்"  நவம்பர் 1 முதல் 9 முடிய புத்தகத் திருவிழாவை இனிதே முடித்திருக்கிறது, தேவகோட்டை என்பது நகரமும், கிராமும் இல்லாத ஊர். ஜாதி ஆதிக்கத்தால் பெயரைக் கெடுத்துக் கொண்ட ஊர். ஆன்மீகத்திற்கு நேரத்தையும், பொருளையும் நிறையவே இழக்கும் ஊர். இப்படியான நிலையில் வணிகச் செழுமை, மக்களின் பொருள் ஆதாரம், ஊர் வளர்ச்சி என்பது எங்களின் ஏக்கமாகவே இருக்கிறது. நேற்று முளைத்த ஊர்கள் எல்லாம் பிரமிப்பாய் இருப்பதால், எங்களுக்கு நிறையவே கவலை. 

இப்படியான வேளையில், தேவகோட்டையில் புத்தகத் திருவிழா நடந்திருப்பது எங்களையும் கடந்து, எங்களின்  உள்ளத்திற்குக் கொண்டாட்டம். அறிவுப்பூர்வமும், ஆக்கப்பூர்வமும் வளர வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்படும் ஆனந்தக் கொண்டாட்டம். ஜாதி, மத மரச் சிந்தனைகள் மறைந்து, மனிதச் செடித்  துளிர்க்க வேண்டுமே என்கிற வாட்டம்.

இந்த ஏக்கம், புத்தகத் தாக்கம் ஏற்பட்டால் போகும் என்பதாலே, புத்தகத் திருவிழாவைக் கட்டித் தழுவுகிறோம். ஒருமனிதருக்கு குறிப்பிட்ட அறிவை மட்டுமா புத்தகங்கள் கொடுக்கின்றன? இல்லை! இந்த உலகையே புத்தகங்கள்தான் கொடுத்துள்ளன. எல்லாவற்றிலும்  கவனம் செலுத்தும் நாம், அதைப் புத்தகங்களின்  மீது கொடுத்துப் புது வாழ்வு பெறலாம் தானே!  அந்தப் புது வாழ்வு எங்கள் ஊருக்கு வந்தால், எங்கள் கால்கள் நாட்டியம் ஆடாமல் என்ன செய்யும்? சொல்லுங்கள் நண்பர்களே!

அந்த மகிழ்ச்சிதான் இந்தக் கணம்! 

தங்கள் மீது கனம் ஏற்றி, இந்தக் கணத்தை எங்களுக்குக் கொடுத்த தேவகோட்டை பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் கவிதா பதிப்பகம் திருமிகு சேது.சொக்கலிங்கம், உமா பதிப்பகம் திருமிகு இராம.லெட்சுமணன், குமரன் பதிப்பகம் திருமிகு எஸ்.வைரவன் மற்றும் எல்லோருக்கும் கரம் கூப்பி நன்றி! 

                                             வி.சி.வில்வம் 


Friday, October 3, 2014

பெருகட்டும் பெரியார் குடும்பங்கள்! அருகட்டும் சமூக அவலங்கள்!!

தந்தை பெரியாரின் 136 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, குடும்பச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது தஞ்சாவூர் மாவட்டத் திராவிடர் கழகம். எதையும் திட்டமிட்டு செய்திடும் அம்மாவட்டம், இந்நிகழ்வையும் தயார் செய்துக் காத்திருந்தது. தஞ்சாவூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருங்குளம் கிராமம். மருங்குளமா ? அது எங்கே என யாரும் "மருகத்" தேவையில்லை. தஞ்சாவூரில் இருந்து செல்லும் போது, முதன்மைச் சாலையில் எண்ணற்ற கொடிகளும், விளம்பரப் பதாகைகளும் நம்மைச் சிரமமின்றி வழி நடத்துகின்றன.

காட்சியும்...மாட்சியும் !

விழா நடைபெற்ற அறிவுச்சுடர் பள்ளி இயற்கைத் ததும்ப காட்சித் தருகிறது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைவாணர் என்.எஸ்.கே, மணியம்மையார், தமிழர் தலைவர் ஆகியோரின் முகப்பு ஒளிப்படங்கள், குடும்பமாய் வருகைத் தந்த தோழர்களின் விழிகளில் பட்டு, முகமெங்கும் மகிழ்ச்சி தெறிக்கிறது. ஆயூத பூஜை, சரஸ்வதி பூஜை, பக்ரித் என மதப்பண்டிகைகள் வரிசைக் கட்டி நின்ற அந்த வாரத்தில்தான், பெரியார் குடும்பங்களும் களைக் கட்டி வந்தனர்.  சிறியதும்,பெரியதுமான வாகனங்களில் தோழர்களின் அணிவகுப்பு பெரும் உவப்பு! வருகைத் தந்தோர் அரங்கினுள் செல்லாமல், அவர்களே வரவேற்பு குழுவாய் மாறிய காட்சி, மனிதநேய மாட்சி !
வருகைத் தந்தோர் பதிவு செய்யவும், குடும்பமாய் ஒளிப்படம் எடுக்கவும் தொடர்ந்து வந்தன அறிவுப்புகள். கருப்புடையில் குடும்பப் படம் இல்லாத தோழர்களுக்கு அன்று அது கிடைத்துவிட்டது. ஆக, சுவையான காலை உணவு தந்து, மகிழ்ச்சியான வரவேற்பு வழங்கி, குடும்பப் படமும் எடுத்து இருக்கையில் இருத்தி விட்டார்கள். இனி நிகழ்ச்சிகளின் சங்கமம். 
குழந்தைகளின் நெஞ்சுரம் !
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் காலை 8 மணிக்கு வருகைத் தந்து, இறுதிவரை நிகழ்ச்சிகளைச் சிறப்பு செய்து கொடுத்தார்கள். தொடக்க நிகழ்ச்சிக்கு அ.கலைச்செல்வி தலைமையேற்க, க.தமிழ்ச்செல்வி வரவேற்புரை வழங்கினார். கோ.செந்தமிழ்ச்செல்வி, இ.அல்லிராணி, ஏ.பாக்கியம், ச.அஞ்சுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடவுள் மறுப்பைப் பெரியார் பிஞ்சு அ.காவியா அழுத்திக் கூற, ஏனையோர் சமூகத்திற்கு அதைத் திருப்பிக் கூறினர். மேடையில் கடவுள் மறுப்பை காவியா மட்டும் தான் முழங்கினார். ஆனால் அவரைச் சுற்றி மேடையில் படர்ந்த பிஞ்சுகளோ இருபதுக்கும் மேல். எவ்வளவோ விஞ்ஞானிகள் நாட்டில் உள்ளனர். ஆனால் கடவுளை மறுக்கும் நெஞ்சுரம் பெரும் விஞ்ஞானம் அல்லவா?  தொடர்ந்து குடந்தை அறிவுவிழி வழங்கிய வரவேற்பு நடனம். பாங்கான நடனம் என்பதுடன், பானையில் ஏறி நின்று ஆடிய அசத்தல் நடனம். பின்னர் பெரியார் பிஞ்சு பு.வி.கியூபா ஒரு நடனத்தை வரவேற்பாகக் கொடுத்தார். நிகழ்வில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, மணியம்மையார் படங்களைக் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் திறந்து வைத்தார். தொடந்து  கழகப் பொருளாளர் சு.பிறைநுதல்செல்வி தொடக்கவுரை ஆற்றினார்.கோ.செந்தமிழ்ச்செல்வி, இ.அல்லிராணி, ச.அஞ்சுகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தொடக்க நிகழ்வுகளில் பங்கேற்ற அனைவருக்கும் மகளிரே சிறப்புச் செய்த சிறப்பு அங்குக் காணப்பட்டது.
விளையாட்டுப் போட்டிகள்!
குடும்ப மகிழ்வின் அடுத்த நிகழ்வாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பெரியார் பிஞ்சுகள் மற்றும் மகளிருக்கான போட்டிகளை மா.இராசப்பன், மாணவரணி, இளைஞரணி, பெரியவர்களுக்கான போட்டிகளை வ.இளங்கோவன், வெ.ஜெயராமன், மு.அய்யனார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஓட்டப் பந்தயம், கூடைப் பந்து, குண்டு எறிதல், வலைப்பந்து, கயறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் இருபாலருக்கும் நிகழ்ந்தது. "போட்டி" என்கிற வார்த்தைப் பெயரளவுக்கு இருந்தாலும், அங்கு மகிழ்ச்சியே எல்லா விளையாட்டிலும் முதலிடம் பிடித்தது. அதுதான் விழா அமைப்பாளர்களின் நோக்கமாகவும் இருந்தது.
சொற்றொடர் விளையாட்டு!
இது நம் பிஞ்சுகளுக்கான விளையாட்டு. தொடங்கி வைத்தவர் நா.இராமகிருஷ்ணன். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மாநிலக் கலைத்துறைச் செயலாளர் ச.சித்தார்த்தன், பார்வையாளர் கூடத்தில் இருந்த குழந்தைகளுக்கு ஒரு அறிவுப்பு செய்தார். "நான் ஒரு வாசகம் சொல்வேன். அதைப் பிழையின்றி சொல்ல வேண்டும். தயாராய் இருப்பவர்கள், தைரியம் இருப்பவர்கள் மேடைக்கு வாருங்கள்", என்றார். அடுத்த நிமிடம் மேடையே  நிரம்பியது. ஆம்! அத்தனைக் குழந்தைகளும் மேடையில் இருந்தார்கள். தயாராய் இருப்பவர்கள் என்றால் பொறுக்கலாம்... தைரியம் இருப்பவர்கள் என்றால் எப்படி பொறுப்பது? அதுவும் சுயமரியாதைக் குழந்தைகளிடம் செல்லுமா? போட்டிக்கு நிரம்பிய குழந்தைகளைக் கண்டு சித்தார்த்தன் மகிழ்ந்தார். கூடவே பெரியார் குடும்பங்களும் மகிழ்ந்தன. பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! தமிழர் தலைவர் கி.வீரமணி வாழ்க! என்கிற முழக்கத்தோடு, சுயமரியாதை, பகுத்தறிவு வாசகங்களை ஒருங்கிணைப்பாளர் கூற, குழந்தைகளும் கூறினர். ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு வார்த்தைகள். மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, சிறப்பு, சிரிப்பு என எல்லோரும் இரண்டு கிலோ எடை கூடினர்.
அறிவுசார் பட்டிமன்றம் !
அடுத்தத் தலைமுறையை அறிவுசார்ந்த சமுதாயமாக மாற்றுவதில் விஞ்சி நிற்பது பெரியார் பிஞ்சு இதழே! உண்மை இதழே! என்பதுதான் அதன் தலைப்பு. மா.அழகிரிசாமி பட்டிமன்றத்தைத் தொடங்கி வைக்க, வழக்கறிஞர் பூவை.புலிகேசி நடுவர் பொறுப்பு ஏற்றார். பகுத்தறிவு, யாழினி, திரிபுரசுந்தரி, தமிழருவி,திராவிடமணி,தமிழ்ச்செல்வன் ஆகிய அறுவர் அழகாய் பேசினர்.
அலறும் பேய்.. பிசாசுகள்!
அறிவுசார் பட்டிமன்றம் முடிந்த வேளை, அலறும் பேய், பிசாசு குறித்துப் பேச வந்தார் மருத்துவர் கவுதமன். அந்தக் காலப் பேய்கள் எப்படிக் கத்தும், இந்தக் காலப் பேய்கள் எப்படிக் கத்தும் எனக் கத்திக் கத்திக் காண்பித்தார். சாமி ஆடுவது குறித்து, ஆடி, ஆடியும் காண்பித்தார். பிள்ளைகளுக்கு ஏற்ற உடல் மொழி காட்டிய அவர், பிள்ளைகள் உடலுக்குள் புகுந்து கொண்டார். பேய்கள் வெளியேறின.
அறிவுக் கவிதைகள் !
பெரியார், பாரதிதாசன், மணியம்மையார் குறித்தக் கவிதைகளைப் பிள்ளைகள் வாசிக்க, பிரமித்துப் போனார் தங்க.வெற்றிவேந்தன். அவர்தான் அந்நிகழ்வைத் தொடங்கி வைத்தார். அக்கவிதைகளில் சிலவற்றை, அக்குழந்தைகளில் சிலர் எழுதாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் வாசித்த அந்த ஆர்வம், வெளிப்படுத்திய அந்த உணர்ச்சி, கண்களில் அந்தக் கோபம், இவையாவும் வெளிப்படுத்தின, இவர்கள்தான் இச்சமூகத்துக் குழந்தைகள்!
ஓவியங்கள் !
ஓவியங்கள் பங்கேற்ற  ஓவியப் போட்டிகள் பிற்பகலில் நடைபெற்றன. தொலைநோக்காளர் பெரியார், அய்யா ஒரு சமுதாய விஞ்ஞானி, பெரியார் ஒரு முழுப் புரட்சியாளர்  எனும் தலைப்புகளில் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. பெரியார் என்ற காவியம், ஓவியம் கொண்டு அசத்தப்பட்டது.  ந.காமராஜ், இரா.பாலு, இரா.சரவணக்குமார் ஆகியோர் ஒவ்வொரு பிரிவிக்குமான போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

கலை நிகழ்ச்சிகள்!

ஏமாறாதீங்க! மந்திரமா? தந்திரமா? எனும் தலைப்பில் பி.பெரியார் நேசன், வே.தமிழ்ச்செல்வன், பங்குபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் பெரியார் பிஞ்சுகளும் கலந்து கொண்டு கலக்கினர். உறந்தை கருங்குயில் கணேசன், வீதி நாடக வித்தகர் ச.சித்தார்த்தன் இருவரும் "மூச்செல்லாம் பெரியார்" எனும் தலைப்பில் இசை நிகழ்ச்சி நடத்தினர். தொடர்ந்து நகைச்சுவை, சிந்தனை, இசைப் பட்டிமன்றம் நடைபெற்றது. தமிழர்களின் பண்பாட்டைப் பெரிதும் சீரழிப்பது ஊடகங்களே! மதச் சடங்குகளே! என்பது அதன் தலைப்பு. துரை.சித்தார்த்தன் இந்நிகழ்வைத் தொடங்கி வைக்க, எஸ்.பி.பாஸ்கர் நடுவர் பொறுப்பை ஏற்றார். ஆலங்குடி வெள்ளைச்சாமி, இரா.தனிக்கொடி, யாழ்.திலீபன், சு.சிங்காரவேலர் ஆகியோர் களமிறங்கினர். சமூகச் சிந்தனைகளை நகைச்சுவையில் நனைத்து, இசையில்  தோய்த்துக் கொடுக்க மக்கள் குலுங்கினர். நிகழ்வின் இறுதியில் பொதுச் செயலாளர்கள்  இரா.செயக்குமார், இரா.குணசேகரன், மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரசு பெரியார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

பாராட்டும்! பரிசளிப்பும்!
மனிதருக்கான உந்து சக்தியாகப் பாராட்டும், பரிசளிப்பும் இருக்கிறது! அதிலும் குழந்தைகளுக்கு அதுதான் முதல் சக்தி!  "எல்லோருக்கும் வாழ்த்துத் தெரிவியுங்கள். அதிலும் உங்கள் வாழ்த்து முதலாவதாக இருக்கட்டும்!'' என ஒரு பொன்மொழி உண்டு. அந்த வகையில் அனைத்துக் குழந்தைகளுக்கும் பாராட்டும், பரிசளிப்பும், பிற தோழர்களுக்குப் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட்டன. கூடுதலாக ஜாதி, மத மறுப்பு மற்றும் மறுமணம் செய்து கொண்ட தோழர்களுக்கு நினைவுப் பரிசு அளிக்கப்பட்டன. பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் கோ.தங்கராசு தலைமை வகித்தார். ஆர்,பி.எஸ்.சித்தார்த்தன், கே.வீரையன், சி.அமர்சிங், அ.அருணகிரி, சி.மணியன், ச.சந்துரு, குருசாமி, பாலு ஆகியோர் முன்னிலை ஏற்றனர். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவருக்கும் பரிசளித்து, பாராட்டிப் பேசினார். இறுதியாக அறிவுச்சுடர் பள்ளியின் புதிய கட்டிடப் பகுதியில் கவிஞர் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.
உணவுத் திருவிழா !
நிகழ்வன்று காலை சுவையான சிற்றுண்டி. பின்னர் 11 மணியளவில் சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், நன்னாரி, சித்தரத்தை, ஏலம், ரோஜா, மொக்கு, மல்லி, சீரகம், லவங்கம் உள்ளிட்ட 18 வகையான மூலிகைகள் அடங்கிய திரிகடுகம் தேநீர் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை தஞ்சாவூர் அன்னை இயற்கை உணவு அங்காடி உரிமையாளர் எம்.ஆர்.ரவி அவர்கள் செய்திருந்தார்கள். அதேபோல கண்ணை தாமரைக்கண்ணன் அவர்கள் ரசாயன உரம் சேர்க்காத நொறுவல்கள் (ஸ்நாக்ஸ்) வழங்கினார். பிற்பகல் உணவும் பார்த்துப் பார்த்துச் செய்து பதமாய், பாசமாய் பரிமாறப்பட்டது. மதிய வேளையில் பழக்கடை கணேசன் அவர்கள் வாழைப்பழங்கள் வழங்க, மாலை வேளையில் பாம்பே இனிப்பகம் உரிமையாளர் இனிப்புபும், நொறுக்குத் தீனிகளும் கொடுத்து உதவினார். இனி சுவையக உரிமையாளர் பாலசுப்பிரமணியன் வாழைப்பூவில் 1000 வடைகள் செய்து அசத்தினார். 


விழா ஒருங்கிணைப்பு !
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.செயக்குமார், மாநில கலைத்துறைச் செயலாளர் ச.சித்தார்த்தன், பி.பெரியர்நேசன், வெ.நாராயணசாமி, கோபு.பழனிவேல், தி,பொய்யாமொழி, வே.ராஜவேல், இரா.வெற்றிக்குமார், இரா.இளவரசி, இரவி.தர்மசீலன்,
சி.பிரபாகரன், சி.அமிர்தசுபா, வே.தமிழ்ச்செல்வன், செ.ஏகாம்பரம், கோ.இராமமூர்த்தி, வ.ஸ்டாலின், பேபி.ரெ.இரவிச்சந்திரன், சு.முருகேசன், சாமி.அரசிளங்கோ, தனபால், சுப்பிரமணியன், இரா.சிவக்குமார், மனோஜ், இராயபுரம் சேது, மன்னை தமிழ்ச்செல்வம் மற்றும் மருங்குளம் அறிவுச்சுடர் பள்ளி நிருவாகி க.தமிழ்ச்செல்வி, பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், வாகன ஓட்டுநர்கள்.                                                                                                                                                          
                                                        

வி.சி.வில்வம்

Thursday, August 21, 2014

நாளைய தலைமுறைக்கான நாற்றங்கால் - பெரியார் 1000 !

                 

மகிழ்வும்! நெகிழ்வும் !
"1000 பெரியார் வந்தாலும் மூட நம்பிக்கைகளைத் திருத்த முடியாதோ ?" என நடிகர் விவேக் ஒரு படத்தில் வருத்தம் கொள்வார்.  "பெரியார் 1000" அந்த வருத்தங்களை உறுதியாய் நீக்கும் என நாம் நம்புகிறோம். தமிழகச் செய்திகள் மகிழ்வையும், நெகிழ்வையும் ஒரு சேர தந்து போகின்றன. பணம் பத்தும் செய்யும் என்பார்கள். சமூகத்திற்குப் பயன்படாத அந்த பத்தால் என்ன பயன்? கொடிகள் கொண்ட எல்லோரிடமும் கோடிகள் இருக்கிறது. கோடிகள் செய்யாததைக் நாம் செய்கிறோம்.  அந்த வலிமையின் வழி செய்தவர் பெரியார்.          
பெரியார் 1000 - அறிமுகமும்! பரிணாமும்!
நம் சமூகம் குறித்து அறியவும், அச்சமூகத்தில் நம்மை அறியவும் உதயமானதே பெரியார் 1000. எழுதப்படாத காகிதங்கள் மாணவர்கள்! அவர்களே இத்திட்டத்தின் இலக்கு. பெரியார் என்பவர் கடவுள் இல்லை என்றல்லவா சொன்னார்? ஆம்! "இல்லை" என்றுதான் சொன்னார். ஆனால் "உன்னிடம் எல்லாமே" இருக்கிறது என்றவர் அவர்!  பாடம் சொல்லும் பெரியார் கள்ளுக்கடை மறியலிலும், வைக்கம் வீரருமாய் சுருங்கிப் போகிறார். ஆனால் அவர் குறித்து அறிய ஆயிரம் இருக்கிறது. அதுதான் "பெரியார் 1000".
தமிழ், ஆங்கில மொழிகளில் 1000 கேள்விகளுடன் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவும், தமிழில் "சிந்தனைச் சோலை - பெரியார்" எனத் தலைப்பிட்டு 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு பிரிவிலும் சிந்திக்கத் தொடங்குகிறார்கள். இதில் 600 கேள்விகள் அடங்கும். சமூகத்தில் அடங்க மறுக்கும் அனைத்தையும் இக்கேள்விகள் அடக்கும்! இதுதவிர புதுச்சேரியில் பிரெஞ்சு மொழியில் பெரியார் உலகமயமாகிறார். 

புது உலகின் ஏணி !

ஆகஸ்ட் 23,24,  30,31 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற இருக்கிறது. தேவையெனில் தேதிகள் நீட்டிக்கப்படலாம். தேர்வில் 90 கேள்விகளும், 90 நிமிடங்களும் வழங்கப்படும். இந்தத் தேர்வு வெற்றிக்கானது அல்ல; வாழ்வுக்கானது! புது வாழ்வின் படிகளில் ஒரு இலட்சம் மாணவர்கள் ஏற இருக்கிறார்கள் என்பது எவ்வளவு சிறப்பு!  சென்ற ஆண்டு 67 ஆயிரம் மாணவர்களை அழகுபடுத்திய பெரியார் 1000, விசாலப் பார்வையால் உலகை விழுங்கும்!

தமிழகமும்,பெரியாரும் நீருபூத்த நெருப்பு!
அந் நெருப்பு எவரையும் அழித்ததில்லை. மாறாக வெளிச்சமாக்கியது. அதில்தான் நீங்கள், நாங்கள், அவர்கள் என எல்லோருமே பயணிக்கிறோம். இதோ... தோழர்களின் அனுபவம் கேட்போம்!
1. எங்கள் பள்ளிக்கு ஏன் பெரியார் 1000 அமைப்பினர் இன்னும் வரவில்லை எனும் நிருவாகத்தின் ஆவல் கேள்விகள்.
2. எங்கள் பள்ளிக்கு 20 புத்தகம் போதும் என்றவர்கள், அடுத்த நாளில் 200 புத்தகம் கேட்ட மாற்றம். இதுவே சில பள்ளிகளில் 500 க்கு            மேல் உயர்ந்த அற்புதம்.
3. எங்கள் பள்ளியில் "பெரியார் 1000" வருமா எனத் தெரியவில்லை. ஆனால் நான் எழுத வேண்டும் என்ன செய்ய? என மாணவர்கள் ஆர்வமுடன் கேட்பது. (தேர்வு எழுதுவதில் இவ்வளவு ஆர்வமா? இது தேர்வல்ல... நகர்வு!)
4. எங்கள் பிள்ளைகள் எழுத வேண்டும். அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எனப் பெற்றோரும் கேட்பது.
5. உங்கள் புத்தகத்தில் முக்கியமாய் ஒரு எழுத்துப் பிழை உள்ளது என உன்னிப்பாய் சொன்ன மாணவரை எண்ணிப் பார்த்துப் பெருமை கொண்டது.
6. பெரியார் குறித்து எப்படி பேசலாம் என ஒரு தமிழர்(?), வம்புடன் தலைமை ஆசிரியரை அணுக, அவர் அன்புடன் பதில் சொல்லியுள்ளார். பெரியார் இல்லாவிட்டால் நீங்களும் இல்லை, உங்கள் மகனும் இங்கு மாணவர் இல்லை, நானும் தலைமை ஆசிரியர் இல்லை எனச் சொல்லி, ஆர்வம் இருந்தால், அதுவும் விடுமுறை நாளில் எழுதலாம். இல்லாவிடில் உங்கள் மகனை நீங்கள் நிறுத்திக் கொள்ளுங்கள். பள்ளிக்குத் தடை விதிக்க முடியாது என்றாராம். (தேர்வு எழுத எதுவும் கட்டாயம் இல்லை. தன் கருத்துகளையே கட்டாயமாய் ஏற்கக் கூடாது எனச் சொன்னவர் அல்லவா பெரியார்!)
7. மாணவர்கள் ஆர்வத்தில் ஆசிரியர்களும், ஆசிரியர்கள் உற்சாகத்தில் மாணவர்களும், இவர்கள் இருவரின் அன்பில் நம் தோழர்களும் இணைந்துச் சமூகத்தை அழகு செய்ய இருக்கிறார்கள்.
அந்த அழகான சமூகத்தில் பெரியாரை யாரும் தவறாகப் பேசிவிட முடியாது. காரணம் மாணவர்களுக்கு வரலாறு தெரியும்.  

 வி.சி.வில்வம்

Saturday, August 9, 2014

களப்பணி பயிற்சி முகாம் !

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில்
  13 மண்டலங்கள், 59 மாவட்டங்களுக்கு, 16 மய்யங்களில்
களப்பணி பயிற்சி முகாம் !
                                     பெருந்திரள் தோழர்கள் அணிவகுப்பு !                                                                
                                                                                                                                             
களப்பணி தோற்றம் :
தஞ்சாவூரில் 09.05.2014 அன்று நடைபெற்ற, திராவிடர் தலைமைக் கழகச் செயற்குழுக் கூட்டத்தில், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஒர் அறிவிப்பு செய்தார். புதுச்சேரி உள்ளிட்டு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களுக்கான "களப்பணி பயிற்சி முகாம்" நடத்த வேண்டும். அது நம்மை மேலும் உத்வேகம் செய்வதுடன், புதிய பரிணாமத்திற்கும் வித்திடுவதாய் அமைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆசிரியரின் விருப்பத்தை நிறைவேற்றிட தயக்கம் ஏது? சுணக்கம்தான் ஏது? உடன் களப்பணி பயிற்சிக் குழு தயாரானது. தமிழகம் முழுவதும் தேதிகள் அறிவிக்கப்பட்டன.
நாளும், தளமும் :

ஆசிரியர் அறிவித்த 15 ஆம் நாளில், அதாவது மே 24 ஆம் தேதி முதல் களப்பணி பயிற்சி முகாம் புதுச்சேரியில் தொடங்குகிறது. புதுச்சேரி, காரைக்கால் மண்டலங்கள் இப்பயிற்சியை மேற்கொள்கின்றன. தொடர்ந்து கடலூர், சிதம்பரம் மாவட்டங்கள் பங்கேற்ற பயிற்சி வகுப்பு மே 25 ஆம் தேதி வடலூரிலும்/   மதுரை மாநகர், புறநகர்,விருதுநகர் மாவட்ட வகுப்புகள் ஜூன் 7 ஆம் தேதி மதுரை பசுமலையிலும்/   திண்டுக்கல், பழனி, தேனி மாவட்டங்களுக்கு ஜூன் 8 ஆம் தேதி திண்டுக்கல் சிறுமலையிலும்/  திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்ட வகுப்புகள் ஜூன் 22 இல் நெமிலியிலும்/  திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டப் பயிற்சி வகுப்பு ஜூன் 27 ஆம் நாளில் குற்றாலம் வீகேயென் மாளிகையிலும்/  சேலம், மேட்டூர், ஆத்தூர், மாவட்ட களப்பணி முகாம் ஜூலை 5 இல் சேலத்திலும்/ திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத் தோழர்களுக்கு ஜூலை 6 ஆம் தேதி திருப்பத்தூரிலும் மிகச் சிறப்பாக நடந்தேறுகிறது. 

தொடர்ந்து கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், தாராபுரம், நீலகிரி மாவட்ட முகாம் ஜூலை 12 ஆம் தேதி மேட்டுப்பாளையத்திலும்/
ஈரோடு, கோபி, நாமக்கல், மாவட்டத் தோழர்களுக்கு ஜூலை 13 ஆம் தேதி ஈரோட்டிலும்/  திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, செய்யாறு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு ஜூலை 19 ஆம் தேதி திண்டிவனத்திலும்/ வடசென்னை, தென்சென்னை, கும்மிடிப்பூண்டி,ஆவடி, தாம்பரம் மாவட்டப் பயிற்சி முகாம் ஜூலை 20 ஆம் தேதி தலைநகர் சென்னையிலும் - திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி ஆகிய மாவட்டங்களுக்கு ஜூலை 25 இல் திருவாரூரிலும்/  காரைக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, அறந்தாங்கி மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஜூலை 26 இல் வீகெயென் மாளிகையிலும்/  திருச்சி, இலால்குடி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டதிற்கு ஜூலை 27 இல் திருச்சி பெரியார் கல்வி வளாகத்திலும்/ தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய மாவட்டத் தோழர்களுக்கு அதே ஜூலை 27 ஆம் தேதி வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திலும் நடைபெற்று முடிந்தது.

சுழற்சியில் பயிற்சி !

திராவிடர் கழகத்தின் 13 மண்டலங்கள், 59 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் உள்ளிட்டு, இந்தக் களப்பணி பயிற்சி முகாம் சற்றொப்ப 2 மாதங்கள் தொடர்ந்து அதன் வீச்சை வெளிப்படுத்தி வந்துள்ளன. ஜூன் 27 மற்றும் ஜூலை 20 முறையே குற்றாலம், சென்னை ஆகிய பயிற்சி முகாம்களில் தமிழர் தலைவர் அவர்கள் பங்கேற்று அற்புதமான ஓர் வகுப்பைத் தோழர்களுக்கு எடுத்துச் சென்றார். தொடர்ந்து "கழகப் பொறுப்பாளர்களின் செயல்பாடுகள்"  என்ற தலைப்பில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,  "இயக்கத்தில் மகளிர் பங்கு"  என்ற தலைப்பில் கழகப் பொருளாளர் பிறைநுதல் செல்வி, "பதிவேடுகள், ஆவணங்கள் பராமரிப்பு, தொழிலாளரணி விரிவாக்கம்" என்பது குறித்துச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, "பன்முகப் பிரச்சார ஏடுகள்" தொடர்பாகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன், "பிரச்சார அணுகுமுறையும், அறிவியல் தொழில் நுட்பமும்" குறித்துப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், "இளைஞரணி, மாணவரணி கட்டமைப்பு, புதிய இடங்களில் அமைப்புகளை உருவாக்குதல் குறித்துப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், விடுதலைச் சந்தா சேர்த்தல், நன்கொடை பெறுதல் தொடர்பாய் பொதுச் செயலாளர் இரா.குணசேகரன், இடஒதுக்கீட்டின் இன்றைய நிலை, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து கோ.கருணாநிதி ஆகியோர் ஒன்றன்பின் ஒன்றாக வகுப்புகளை எடுத்தனர்.

நோக்கமும், தாக்கமும் !
 
மொத்தம் 13 மண்டலங்களில் நடைபெற்ற இக் களப்பணி பயிற்சி முகாம்களில் குற்றாலம், சென்னை ஆகிய இடங்களில் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள். அவர்கள் ஆற்றிய உரையில், நம் இயக்கம் வேறெந்த இயக்கத்திற்கும் மற்றும்  அரசியல் அமைப்புகளுக்கும் சளைத்தது அல்ல என்பதை ஆதாரபூர்வமாக விளக்கினார்கள். புதுதில்லி தொடங்கி, தமிழ்நாட்டுக் குக்கிராமம் வரையிலான  இயக்கச் சொத்துகள் குறித்துக் குறிப்பிட்டார்கள். ஒவ்வொரு ஊரிலும் இயங்கும் நம் நூலகங்கள், படிப்பகங்கள் வேறு எவருக்குமே இல்லாதது; வேறு எங்குமே இல்லாதது என்பதை நினைவுபடுத்தினார்கள். இன்றைக்குப்  "பெரியார் உலகத்தை" உருவாக்கும் பெரும் பணியில் நாம்      இருக்கிறோம். அப்படியான நம் இயக்கச் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தலைமையில் ஓர் அறிவிப்பு என்றால்,  இருட்டும் முன்பே கிளைக் கழகக் காதுகளுக்கு அது சென்று சேர வேண்டும். மனிதர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வது  நித்தமும் அவசியமாகிறது என்றார் ஆசிரியர்.

சுவரெழுத்தே ஆயுத எழுத்து !
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் "கழகப் பொறுப்பாளர்களின் செயல்பாடுகள்" என்ற தலைப்பில் பேசுகையில்,  பாரதீய ஜனதா, இன்று வலுவான சக்தியாக வளர்ந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஏதும் செய்ய முடியவில்லை. காரணம் பெரியார் கொள்கை!  தொடர்ந்து செயல்படுவதன் மூலம் இதனை நாம் தக்க வைக்க முடியும். விடுதலை நம் உயிர் மூச்சு என்பதை நீங்கள் அறிய வேண்டும். மாவட்ட, ஒன்றிய,நகர, கிளைக் கழகக் கூட்டங்களை 3 மாதத்திற்கு ஒருமுறையும், அதேகால இடைவெளியில் தெருமுனை மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்துங்கள். நிறைய புதுத் தோழர்கள் கிடைப்பார்கள். அவர்களை விடுதலை வாசகர் வட்டத்திற்குள் அழைத்து போங்கள். உடன் உறுப்பினர் சேர்க்கையைத் துவங்குங்கள். உங்களின் வணிக நிறுவனங்களில் இயக்க நூல்கள் கிடைக்கச் செய்யுங்கள். ஆண்டிற்கு நான்கு முறை இயக்கக் கொடிகளைப்  புதிப்பியுங்கள். புதிய, புதிய பகுதிகளில் படை எடுங்கள். எளிமையான மந்திரமா? தந்திரமா ? தீமிதி போன்ற போன்றவற்றை செய்து காட்டுங்கள். குறிப்பாகத் தோழர்களே ! உங்கள் ஊரில் அல்லது தெருவில் சிறு கரும்பலகை வைத்து எழுதுங்கள். அதன் பலனை வெகு சீக்கிரமே  நீங்கள் பெறுவீர்கள். அதேபோல சுவர் எழுத்தே நம் சமூகத்திற்கான ஆயுத எழுத்து என்பதை அறிந்து மறவாதீர்கள் என்று கலி.பூங்குன்றன்  பேசினார்.

மகளிரும் வெற்றியும் !
"இயக்கத்தில் மகளிர் பங்கு"  என்ற தலைப்பில் கழகப் பொருளாளர் பிறைநுதல் செல்வி அவர்கள் பேசும்போது, எந்த இயக்கத்தில் பெண்கள் பங்கு அதிகம் இருந்ததோ, அது மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இது ஓர் வரலாற்றுப் பதிவு. அவ்வகையில் மகளிரை அதிகம் முன்னிலை ஏற்ற இயக்கம் நம்முடையது. இதை அதிகமாக்க வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால், அக்குடும்பமே கல்வி பெறுவதுபோல,  ஒரு மகளிர் கொள்கை ஏற்றால் அக்குடும்பமே கொள்கைக் குடும்பமாக மாறும். எனவே பெண்களுக்கு நிறைய முக்கியத்துவம் அளியுங்கள். குழந்தைகள் மற்றும் மகளிர் சந்திப்புகள் நிறைய நடக்க வேண்டும். நிகழ்ச்சிகளில் அவர்களே கடவுள் மறுப்புக் கூற வேண்டும், அவர்களே தலைமை, முன்னிலை ஏற்க வேண்டும், எல்லாமும் அவர்களாகவே இருக்க வேண்டும். இதன் மூலமே கொள்கை வாரிசுகளை நாம் எளிதில் உருவாக்க முடியும் என பிறைநுதல் செல்வி  பேசினார்.
ஆவணங்களே அளவீடு !

"பதிவேடுகள்,ஆவணங்கள் பராமரிப்பு, தொழிலாளரணி விரிவாக்கம்" என்பது குறித்துச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் பேசுகையில், இயக்க ஆவணங்கள், பதிவேடுகள் பின்பற்றுவதில் கவனம் அவசியம். இயங்குவது எவ்வளவு முக்கியமோ, அதைப் பதிவிடுவதும் மிக அவசியம். மாவட்டம், ஒன்றியம், நகரம், கிளைக்கழகம், மாணவரணி, மகளிரணி, தொழிலாளரணி, வழக்கறிஞரணி என எல்லாவற்றிற்கும் பதிவுகள் அவசியம். பொறுப்பாளர்கள் மாறும் போது, பயன்படுத்திய ஆவணங்களைப்  புதியவர்களிடம் கொடுக்க வேண்டும். தனித்தனி ஆவணங்கள் கூடாது. இயக்கக் கூட்டங்கள் முடிந்த பிறகு வரவு, செலவு ஆவணங்களைத் தலைமைக்கு அனுப்பிய வரலாறுகள் நம்மிடம் நிறைய உள்ளன. அதேபோன்று தலைமையில் இருந்து வரும் கடிதங்களை ஒரு கோப்பிலும், நீங்கள் அனுப்பும் பதில்களை மற்றொரு கோப்பிலும் பத்திரப்படுத்துங்கள். தோழர்களின் முகவரி, தொடர்பு எண்கள், மின்னஞ்சல் அனைத்தையும் ஆவணப்படுத்துங்கள். அது நம்முடைய சொத்து என்பதையும் கூடவே நினைவில் கொள்ளுங்கள் என சு.அறிவுக்கரசு  பேசினார்.

அடையாளம் அவசியம் ! 

"பன்முகப் பிரச்சார ஏடுகள்" தொடர்பாகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்கள் தம் உரையில், பெரியாரியலை வாழ்வியலாக கொண்டவர் தன் ஒவ்வொரு அசைவிலும் தம்மை அடையாளம் காட்ட வேண்டும். மக்கள்  தொடர்புகளில் நிறைய ஆர்வம் கொள்ள வேண்டும். நம் தேகத்தில், வாகனங்களில், வீட்டில் என எல்லா இடங்களிலும் நாம் யார் என்பதை அவர்களுக்கு அறிவிக்க வேண்டும். அது அய்யா கொடியாக  இருக்கலாம், அய்யா, ஆசிரியர் படமாக இருக்கலாம். எந்த நேரமும், ஏதாவது ஒரு வடிவில் மக்களுக்கான நினைவூட்டல் அவசியம். நல்ல அம்சங்கள் எதுவும் இல்லாத அரசியல் கட்சிகளில் இவ்வளவு  மக்கள் திரள் எப்படி வந்தது? "அங்கே பதவியும், பணமும் கிடைக்கிறது", என நீங்கள் சொன்னால் அதை நான் மறுப்பேன். பல இலட்ச உறுப்பினர்களில் வெகு சிலருக்கே நீங்கள் சொல்லும் சுகம் கிடைக்கிறது. மற்றவர் நிலை மிகச் சாதாரணமே. அப்படியிருக்க  குறிக்கோள், கொள்கை எதுவும் இல்லாத, சுயமரியாதை உணர்வு பெற முடியாத அந்நிலையிலிருந்து அம்மக்களை நம்மால் வெகுவாக கவர முடியும். தெருமுனை மற்றும் பொதுக் கூட்டங்கள் மூலம் எப்போதும் மக்களுடன் களத்தில் இருங்கள் என துரை.சந்திரசேகரன்  பேசினார்.

 
சிறியதாயினும் தொடர்ந்து செய்யுங்கள் !

"பிரச்சார அணுகுமுறையும், அறிவியல் தொழில் நுட்பமும்" குறித்துப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பேசும்போது, புதிய மனிதர்களை அடையாளம் காண்பதும், நம் அருகில் இருக்கும் நண்பர்களை கைப்பிடித்து அழைத்து வருவதும் நம் முக்கிய பணி. சேலத்தில் சாமியாடி வந்த ஒரு பெண்மணி சில நாட்களாக நம் கூட்டங்களுக்கு வந்து போகிறார். தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஒரு பிச்சைக்காரர் சொன்னாராம்,"திருடர்களை உருவாக்கும் இடம் கோவில். மனிதர்களை உருவாக்கும் இடம் திராவிடர் கழகம்" என்று. இந்த வார்த்தையின் ஈர்ப்பால் நம் இயக்கத்தில் இணைந்த ஒரு தோழர் தஞ்சாவூரில் இருக்கிறார். இப்படியான  எண்ணற்ற மக்கள் நம் அருகிலேயே வாழ்ந்து வருகிறார்கள். இந்தியாவில் திட்டமிட்டுச் சிலர் பொய் பேசி வந்தார்கள். அதுவும் திரும்பத் திரும்ப அதே பொய்யை பேசினார்கள். அதன் மொத்த விளைவாக இன்றைக்கு மோடியைப் பார்க்கிறோம். பொய் பேசவே அவர்களுக்குத்  தொடர் முயற்சியும், விடா உழைப்பும் இருக்கும் போது, சமூகத்தைப் பாதுகாக்கும் பொருட்டு நம் வேகம் எந்தப் பாய்ச்சலில் இருக்க வேண்டும்? அதேநேரம் கொள்கைகளைப்  புதிய விதங்களில், சிறந்த அணுகுமுறைகள் கொண்டு கையாளுங்கள். கிடைப்பது வெற்றியாக மட்டுமே இருக்கும் என வீ.அன்புராஜ் பேசினார்.

விதைப்பதை அறுவடை செய்யுங்கள் !

"இளைஞரணி, மாணவரணி கட்டமைப்பு, புதிய இடங்களில் அமைப்புகளை உருவாக்குதல் குறித்துப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் பேசுகையில், இயக்க உறுப்பினர்கள் குறைவு என எண்ணாதீர்கள்.அதைக் கொண்டு தான் தமிழகத்தில் பெரும் புரட்சிகள், மாற்றங்கள் கொண்டு வந்தோம். ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் நாம் இருக்கிறோம். இன்று பெரியாரை உலகம் பேசுகிறது. முன்பு மாவட்டங்கள் மிகப் பெரியதாக இருக்கும். வாகன வசதி, தொடர்பு சாதனங்கள் இல்லாத, அந்தக் காலத்திலே நம் தோழர்கள் வரலாறு படைத்தவர்கள். இன்றைக்கு நம்மிடம் எல்லாம் இருக்கிறது. நல்ல அணுகுமுறையும், உழைப்பும் உள்ள மாவட்டங்களில் தோழர்கள் எண்ணிக்கை கூடி கொண்டே இருக்கும். பழைய, புதிய தோழர்களிடம் எப்போதும் தொடர்பில் இருங்கள். மாநாடு நடத்தி விட்டு ஆறு மாதம் அமைதியாய் இருந்தால், அதன்  அறுவடையை யார் செய்வது? அதேபோல ஊர் நண்பர்கள், இயக்கத் தோழர்கள் வீட்டு  நிகழ்ச்சிகளுக்குக்  கறுப்புச் சட்டையுடன் அய்ந்தாறு பேர் செல்லுங்கள். இவையெல்லாம் மனிதர்களிடம் ஊடுருவிச் செல்ல எளிய வழியாகும் என்று இரா.ஜெயக்குமார் பேசினார்.

விடுதலைப் படிக்கச் செய்யுங்கள் !

விடுதலைச் சந்தா சேர்த்தல், நன்கொடை பெறுதல் தொடர்பாய் பொதுச் செயலாளர் இரா.குணசேகரன் அவர்கள் பேசும்போது, விடுதலை வாழ்வின் 80 ஆண்டுகளில், அதன் ஆசிரியராக தமிழர் தலைவர் அவர்கள் 52 ஆண்டுகள் ஆசிரியராக இருந்து வருகிறார். வெளிநாட்டுப் பத்திரிகை ஒன்றில் 22 ஆண்டுகளே இருந்த ஒருவருக்கு கின்னஸ் சாதனை வழங்கப்பட்டது. அதைவிட பெரும் சிறப்பு பெற்ற நம் ஆசிரியர் அவர்களுக்கு, நிறைய சந்தாக்களை வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் ஏனைய பத்திரிகைகளோடு விடுதலையை ஒப்பிடும்போது, வாழ்வை  உயர்த்தும் பகுத்தறிவுக் கருத்துகள் நம்மிடம் மட்டுமே உள்ளன. தினமும் பல்வேறு துறைச் சார்ந்த செய்திகளை, மிகக் குறைந்த விலையில் நாம் மட்டுமே வழங்கி வருகிறோம்.எனவே தொடர்ந்து மக்களைச் சந்தித்து, குறித்த நேரத்தில் விடுதலை சந்தாக்களை வழங்க வேண்டும் என இரா.குணசேகரன் பேசினார்.

படிப்புக்கான வேலை : வேலைக்கான படிப்பு !

இடஒதுக்கீட்டின் இன்றைய நிலை, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து கோ.கருணாநிதி அவர்கள் பேசும்போது, இடஒதுக்கீட்டைப்  பெற்றுத் தந்த இயக்கம் திராவிடர் கழகம். இந்த உருவாக்கம் குறித்தும், இதன் பயன் குறித்தும் நம் கழகப் பிள்ளைகள் அறியச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் பலரிடமும் எடுத்துக் கூறுவார்கள். சமூகநீதியால் தமிழ்நாட்டில் நாம் பயன்களை   அனுபவிக்க முடிகிறது. மற்ற மாநிலங்களில் அந்த நிலை இல்லை. அதேநேரம் மத்திய அரசு தொடர்பான நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அதை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். நமது  மாணவர்கள் பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புகள் பயின்றாலும், வங்கி வேலை மற்றும் ஏனைய அலுவலக வேலைகளுக்குத் தங்களைத் தயார் செய்து கொள்வதில்லை. மாறாக வட இந்தியாவில் மற்ற படிப்புகள் எப்படி இருந்தாலும், அரசு வேலைகளுக்கான தேர்வுகளில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்நிலை இங்கும் வர வேண்டும் என கோ.கருணாநிதி பேசினார்.
 
 
 
தொகுப்பு
 
வி.சி.வில்வம்

Friday, July 25, 2014

கடவுளின் கதை !


                

    வயல் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் திருச்சி செவனா விடுதியில், 15.07.2014 அன்று நடைபெற்றது. "கடவுளின் கதை"  என்ற தலைப்பில் பேராசிரியர் அருணன் பேசியதாவது:

கடவுளும், சிக்கலும்!

கடவுளின் கதைக் குறித்துப் பேசச் சொல்கிறார்கள். தலைப்பிலே கதை வருவதால், கடவுளும் கதைதான் என்பதை அறியலாம். பொதுவாகக் கடவுளின் கதைகளை எழுதவே எனக்கு வாய்ப்பு இருந்தது. யாரும் பேச அழைத்ததில்லை. ஒருவேளை சிக்கல் வரக்கூடும் என  நினைத்திருக்கலாம். 

உலகில் மாறாதவை இரண்டு !
உலக வரலாறுகளை நான் வாசிக்கத் தொடங்கிய நேரம், அது நிறைய செய்திகளை யோசிக்கக் கொடுத்தது. ஆண்டான் அடிமை யுகத்தைவிட, நிலப்பிரபுத்துவம் சிறந்தது. நிலப்பிரபுத்துவ யுகத்தைவிட, முதலாளித்துவம் சிறந்தது என உலகம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. முதலாளித்துவ யுகத்தைவிட, சிறந்த இன்னொரு யுகம் வர வேண்டும் என்றே  நாம் விரும்புகிறோம். 
"நாகரிகக் கதை" என்கிற நூலின் 11 பாகத்தையும் நான் முடித்திருந்த நேரம். அந்த நூல்தான் எனக்குக் "கடவுளர்களின் கதையை" அறிமுகம் செய்து வைத்தது. இந்த உலகில் எல்லாமும் மாறி இருக்கிறது. ஆனால் கடவுளும், மதமும் அப்படியே இருக்கிறது. ஆதி கால மனிதன் மரத்தைக் கும்பிட்டான். இன்றைக்கும் மரத்தைக் கும்பிடுகிறான். தன்னை எதுவெல்லாம் மிரட்டியதோ, அதற்கெல்லாம் பணிந்தான். தனக்குக் கட்டுப்படாத ஒன்றைக் கண்டு பயந்தான் அல்லது கெஞ்சினான் அல்லது இறைஞ்சி வணங்கினான். அதனால் தான் கடவுளர்களின் எண்ணிக்கை அதிகமானது. 

இறந்தாலும் சாகமாட்டோம் !

முதன்முதலில் ஒரு மனிதன் சக மனிதனையே வணங்கினான்.  தாத்தா நெருப்பு உண்டாக்குவதைப் பெயரன் ஆச்சர்யமாய் பார்த்தான். முன்னோர்கள் அதிசயம்  வாய்ந்தவர்கள்  என எண்ணினர். அவர்கள் இறந்தாலும் சாகவில்லை, உயிரோடு வாழ்வதாக நினைத்தனர். அதுதான் ஆன்மா என்பது அவர்களின் நம்பிக்கை. ஆக கடவுளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது இந்த ஆன்மா. 

எகிப்தில் "மம்மி' என்பது பிணம். அதற்குப் பயன்படும் பிரேதப் பெட்டியில் ஒரு வரைபடம் இருக்கும். அந்த வரைபடத்தில் "மேலுலகம்" செல்வதற்கான வழி இருக்குமாம்.  இறந்தவர்கள் வழி தெரியாமல் தடுமாறக் கூடாதல்லவா? ஆக ஆன்மாக்கள் எல்லோரும் ஒன்றாய் வாழ்வதாய் நம்பினர். அவர்களுக்கான  தலைவர்தான் கடவுள். 

உலகில் கடவுள் தொகை !
கடவுளின் வாமன வடிவம் மனிதன் என்றார்கள். ஆனால் மனிதனின் விஸ்பரூபமே கடவுள்! மனிதன் தன்னிடம் இருக்க வேண்டிய அனைத்தையும் கடவுளிடம் கொடுத்து விட்டு, தான் ஒன்றும் இல்லாதவன் ஆகிவிட்டான். 

உலகம் ஒன்றுதான், அதில் மனிதகுலமும் ஒன்றுதான். பின் ஏன் இத்தனைக் கடவுள்கள்? ரோம ராஜ்ஜிய நூலில், "மனித எண்ணிக்கையை விட, கடவுள் எண்ணிக்கை அதிகம்", என அப்போதே எழுதினார்கள்.   இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கடவுளர்கள் அதிகம். கடவுள்களின் சித்தரிப்பு விதவிதமாக உள்ளது. ஆப்பிரிக்கக் கடவுள் கருப்பாகவும், வெள்ளையர் கடவுள் சிவப்பாகவும்  இருப்பதில் ஆச்சர்யமில்லை. மனிதன்தான் கடவுளைப் படைத்தான் என்பதற்கான உதாரணம் அது. பறவைகளுக்குக் கடவுள் இருந்திருந்தால், அக்கடவுளுக்கு இறக்கைகள் இருந்திருக்கும். பிராந்தியத்திற்கு ஏற்பவும், அக, புறச் சூழலுக்கு ஏற்பவும் கடவுளர்களை நிறைய உருவாக்கித் தள்ளினார்கள்.
                                                                                                                                              
கடவுள் எண்ணிக்கையைக் குறையுங்கள் !
 
கடவுளர் எண்ணிகையில் மிரண்டு போன மனிதன், அதனைக் குறைக்கச் சிந்தித்தான். ஒரு உலகத்திற்கு, ஒரு மனிதக் குலத்திற்கு ஏன் ஒரே கடவுள் இல்லை என்கிற கேள்வி எழுந்தது. விளைவு, கிறிஸ்துவ மதத்தில் கர்த்தர், குமாரர், பரிசுத்த ஆவி என மூன்றாகச் சுருங்கியது. இசுலாமில் ஏகக் கடவுள் ஒருவரே, அவர் பெயர் அல்லா என்றார்கள். பல கடவுள் வழிபாடு தேவையில்லை, ஒரே கடவுள் போதும், அதற்கு உருவ வழிபாடும் தேவையில்லை என இந்து மதமும் முடிவு செய்தது. ஆனால் அவர்களால் இன்று வரை முடியவில்லை. 

கடவுள் தேவையா ? இல்லையா ?
கடவுள் உண்டா? இல்லையா? என்பது போய், கடவுள் தேவையா? இல்லையா? எனச் சிந்திக்கிற காலம் வந்தது. கடவுள் இல்லை என்பது தெரியும். அதனால் என்ன? உண்டாக்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். கடவுள் இல்லையென்றால் ஒழுங்கு, தர்மம் போய்விடும் என்றார்கள் சிலர்.  அதேநேரம் ஒழுங்கு, தர்மம் என்பது அது தன்னளவில் நிலையானதாக இருக்க வேண்டும். அதற்குக் கடவுள் என்கிற கைத்தடி தேவையில்லை. அதனால் நீண்ட காலத்திற்கு முட்டுக் கொடுக்க முடியாது என்றும் பேசப்பட்டது.

முதலாளித்துவத்தில் முதலாளித்துவத் தர்மமும், சோசலிசத்தில் சோசலிசத் தர்மமும் பேசப்பட்டு, தர்மங்கள் மாறிக் கொண்டே இருக்கும்.  இதில் கடவுள் தர்மம் என்பது  கிடையாது என வாதிடப்பட்டது. மேலும் ஒரு அறிஞர் ," சுத்த அறிவைக் கொண்டு கடவுள் இருப்பதை நிராகரிக்க முடியும். ஆனால் நடைமுறைச் சூழலைக் கொண்டு கடவுள் இருப்பதை நம்புகிறார்கள்", என்றார். 

ஒரு விசயம் நமக்குப் பயன்பட்டால், அது உண்மை என்றே வலியுறுத்தப்பட்டது. ஆக உண்மை என்பதற்கு என்னதான் பொருள் ? அதற்குத் தனிப் பொருள் ஏதும் இல்லையா? உலகம் உருண்டையா? தட்டையா ? எனில், தட்டை எனச் சொல்வதால் பயன் இருக்கிறது என்றால், தட்டை என்றே சொல்வோம் என்கிறார்கள். இந்தச் சிந்தனைதான் அமெரிக்கா முழுவதும் இருக்கிறது. கடவுள் இருந்தால் இலாபமா? இல்லாவிட்டால் இலாபமா? என்பதே கணக்காக இருந்துள்ளது.  மற்றபடி "கடவுள் நம்பிக்கை" என்பது தனித்த பொருளாக எப்போதும் இருந்ததில்லை. இதில் பாமர மக்களின் நிலை வேறு  என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
                                                                                                                                             
மதங்களில் பகுத்தறிவு !
அய்ரோப்பாவில் பிசப்புகள்,  பெரும்பாலும் நிலப்பிரபுத்துவ மனிதர்களாகவே இருந்துள்ளனர். கிறிஸ்துவ மதம் நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவம் நோக்கி வளர்ந்த நேரம். அப்போதுதான் பிரெஞ்ச் புரட்சி ஏற்படுகிறது. அது அரசியல் புரட்சி என்று  நிறைய பேர் நினைத்தார்கள். ஆனால் அது மதத்திற்கு எதிரான, பகுத்தறிவு புரட்சி ! கடவுள் நம்பிக்கை இருந்தாலும் மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்கிற எண்ணம் உருவானது. அதற்காக ஓர் இயக்கமும் துளிர்த்தது. அவ்வகையில் கிறிஸ்துவ மதத்தில்தான் முதலில் பகுத்தறிவு நுழைந்தது. அதில் உருவானதே 'புராட்டஸ்டண்ட்' பிரிவு.  ரூசோ சொன்னார்,"குழந்தைகளின் 18 வயது வரை கடவுள், மதம் குறித்துப் பேசாதீர்கள். வளர்ந்த பின்பு அவர்களாகவே முடிவு செய்து கொள்ளட்டும்", என்றார். 

இந்நிலையில் கத்தோலிக்கர் மட்டுமே வழக்கறிஞகராக முடியும். புராட்டஸ்டண்ட் பிரிவுக்கு அந்த வாய்ப்பு இல்லை என்ற நிலையெல்லாம்  இருந்தது. 1789 - 1804 ஆம் ஆண்டுகளில் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான இயக்கமும், கடவுளுக்கு எதிரான சிந்தனையும் பெருகி வந்த நேரம். அந்த நேரத்தில் தன்னைத் தளர்த்திக் கொண்டு, பகுத்தறிவுக்கு இடம் கொடுத்ததால், கிறிஸ்துவ மதத்தில் ஏராளமான அறிவியலார் உருவாகினர்.

அதேநேரம்  இஸ்லாம், பௌத்தம், இந்து மதங்கள் தங்களை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை. அதனால் அவற்றிற்கு வளர்ச்சியும், அறிவியல் கண்டுபிடுப்புகளும் இல்லாமலே போய்விட்டன. 

கடவுள்களின் தோல்வி!
அய்ரோப்பாவில், ஜோதிடத்தை எதிர்த்து 1600 ஆண்டுகளுக்கு முன்பே கேள்வி எழுந்தது. ஒரே நேரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் வாழ்வு கூட, ஒரே மாதிரியாய் இருப்பதில்லையே என்றார்கள். வரலாற்றில் கடவுளர் கதைகள் எப்போதும் பின்வாங்கியே வந்துள்ளன. அப்படியிருந்த காரணத்தாலே மனிதம் வளர முடிந்தது. ஆதி காலத்திலும் நாத்திகர்கள் இருந்துள்ளனர். கோடிக்கணக்கான மக்கம் கடவுளை நம்பும்போது, நாத்திகர்கள் உலகில் சிறுபான்மையே. ஏங்கெல்ஸ் 1882 இல் எழுதினார்,"கடவுள், மதம் கற்பிதம். சமுதாயச் சூழல் அவர்களை அப்படி நம்ப வைக்கிறது. எப்போது கடவுள், மதம் ஒழியும்? மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளும், மதமும் மனிதச் சமுதாயம் ஒழியும் போது, ஒழியும் என்றார்.   

இந்து மதம் திருந்த வேண்டும் !

புண்ணிய பூமியில் உள்ள  இந்து மதத்தில், எந்த மாற்றமும் இன்று வரை வரவில்லை. உங்கள் கடவுள், மதத்தை வைத்துக் கொள்ளுங்கள். பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கு வழி கொடுங்கள்.  மூட நம்பிக்கைகளுக்கு எதிராக மாறுங்கள். கடவுள் உண்டா? இல்லையா? என விவாதிக்கத் தொடங்குங்கள்!  இந்திய அரசியல் சாசனம் கூட, விஞ்ஞான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதன்படியாவது நடங்கள். இந்த மண்ணை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கோலோச்சி வந்துள்ளது பிராமணீய மதம். ஆனாலும் 800 ஆண்டுகள் இஸ்லாமும், 200 ஆண்டுகள் கிறிஸ்துவமும் இந்தியாவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. 


காரணம் பிராமணீய மதம் பகுத்தறிவுக்கும்,  விஞ்ஞானத்திற்கும் எதிராக மட்டுமே இருந்துள்ளன. மூடநம்பிக்கை என்பது உங்கள் கடவுளுக்கே எதிரானது என்பதையாவது அறியுங்கள். அய்ரோப்பாவில் அந்த அளவில்  பகுத்தறிவுக்கு இடம் கொடுத்ததாலே, உலகில் வளர்ச்சி நிலையையும், அறிவியல் ஆச்சர்யத்தையும் வழங்கி வருகிறார்கள். இந்தியாவும் அந்த நிலைக்கு வர வேண்டும். முயற்சி செய்யுங்கள் ! இன்னும் காலம் இருக்கிறது!        

                                                                                                     தொகுப்பு :
                                                                                               வி.சி.வில்வம்


                                              

Thursday, May 1, 2014

ஆண்டுக்கு 240 நாள் வேலை செய்தால் நிரந்தரம் ஆகலாம் என்பது சட்டம்! 30 ஆண்டுகள் ஆகியும், இன்னும் 240 நாள்கள் வரவில்லை !


திருச்சி - திருவெறும்பூரில் அமைந்துள்ள பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) 1964 ஆம் ஆண்டு காமராஜ் அவர்களால் தொடங்கப்பட்டது. திருச்சி மாவட்டப்  புகழுக்கு இந்நிறுவனம் முக்கிய காரண மாகும். அய்ம்பதாவது பொன் விழாவைக் கொண்டாடும் இந்நிறுவனத்தில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர்  பணி செய்கின்றனர். இந்தியாவின் பொதுத் துறை நிறு வனங்களில், குறிப்பிடத்தக்க இடத்தில் இந்நிறுவனம் உள்ளது. மின்சாரம் தயாரிக்க உதவும் கருவிகளை உற்பத்தி செய்வது   இந்நிறுவனத்தின் முக்கிய பணி. இந்தியாவின் மத்திய அரசாங்கம் இந்நிறுவனத்தைக் கேரள மாநிலத்தில் அமைக்க முயற்சி மேற்கொண்ட போது, அதைத் தமிழகத்தின் திருச்சியில் அமைத்தவர் காமராஜர்.

வீச்சுடன் திராவிடர் கழகம்

இவ்வாறான பல சிறப்புகளைக் கொண்ட இந்நிறு வனத்திற்குப் பிரச்சினைகளும் தொடர்ந்தே வருகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உரிய வேலை வாய்ப் பைத் தராத நிலையில், பலரும் போராடினர். குறிப்பாகக் திராவிடர் கழகம் அதற்கான பணியைச் சிறப்பாகச் செய்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பலமுறை பெல் வளாகம் வந்து பேசியிருக்கிறார். பெல் நிறுவனத்தில் செயற்படும் "திராவிடர் தொழிலாளர் கழகத்தை" யாரும் அறியாமல் இருக்க முடியாது. தொடர்ந்து வீச்சுடன் செயற்பட்டு வருகிறது.

தலைமுறை கடந்த பிரச்சினை

இந்நிலையில் சற்றொப்ப 30 ஆண்டுகளுக்கு முன்னர் பணியில் அமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான  "ஒப்பந்தத் தொழிலாளர்கள்"  இன்று வரை அதே ஒப்பந்தத்திலே  நீடிப்பது, நாம் மேலே கூறிய நிறுவனப் பெருமையைக்  கொஞ்சம் அசைத்துப் பார்ப்பதாய்  இருந்து வருகிறது.  இப்பிரச்சினைத் தொடர்பாக ஒப்பந்தத் தொழிலாளர் கள் மற்றும் எண்ணற்ற சங்கங்கள் 30 ஆண்டுகளாய்  மோதிப் பார்த்துவிட்டன. ஆனால் அதிகாரிகள் அசைவ தாய் இல்லை. இதற்கிடையில் தற்காலிகப் பணியில் இருந்த  சிலர், நிரந்தரமாகவே உலகை விட்டுப் பிரிந்து போயினர். தலைமுறை கடந்த இப்பிரச்சினைக்கு என்ன தான் தீர்வு ? எனப் பலரும் சோர்ந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைப் பல சங்கப் பிரதிநிதிகளும் சந்தித்தனர்.

வழக்குத் தொடங்கியதும்!  நினைத்தது நடந்ததும்! 

திருவெறும்பூர் பகுதித் தோழர்களைச் சந்திக்கும் போதெல்லாம், ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்சினைக் குறித்துக் கவலையோடு கேட்பது கழகத் தலைவரின் கட மைகளில் ஒன்றாகவே இருந்தது. தொடர்ந்து நீடிப்பதை, முறியடித்தே தீர்வது என்ற முடிவுக்கு அப்போது கழகத் தலைவர் வந்திருந்தார். உடனே வேலைகள் தொடங்கின. ஆயிரக்கணக்கான அறவழிப் போராட்டங்கள் அவர்களை அசைக்கவில்லை. "சந்திப்போம் சட்டப் பூர்வமாக" என முடிவு எடுத்தார். சட்டம் என்றால் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனத்திற்குக் கைவந்த கலையாக இருக்குமே எனப்  பலரும் பயமுறுத்தினர். வல்லுனர்களுக்கு எல்லாம் வல்லுனர்கள் இருப்பார்களே என வாதாடினர். இருந்து விட்டுப் போகட்டுமே! ஆயிரக்கணக்கான மனிதர்களை ஒடுக்குவதற்கு அவர்களுக்குப் பயன்படும் சட்டம், அவர்களை வாழ வைப்பதற்கு வழியா தராது? என வழக்குத் தொடங்கியது!  ஆசிரியர் நினைத்தது நடந்தது ! நீதியின் குரலால் நெஞ்சம் நிறைந்தது !

"முப்பது ஆண்டு கால ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனே நிரந்தரம் செய்து, வாழ வழி செய்," என நீதிமன்றம் நீதி தந்தது.  "நீதியின் குரல்" நிறுவனம் முழுக்க ஒலித்தது. ஒவ்வொரு அறையாகச் சென்று அதிரச் செய்தது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரு சேர நெகிழ்ந்தார்கள். எல்லோ ருக்கும் மகிழ்ச்சி. அதேநேரம் அதிகாரிகள் நீதியைப் பின்பற்ற வேண்டுமே? நீதிக்கு நீதி (?)  வேண்டும் என அவர்கள் மேலே மேலே போனால், இவர்கள் வாழ்க்கைக் கீழே கீழே அல்லவா போகும் எனத் தோழர்கள் கவலை கொண்டனர். உடனே தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின் சங் கங்களும் ஒன்று சேர்க்கப்பட்டன. ஒப்பந்தத் தொழிலாளர்களுடன், நிரந்தரத் தொழிலாளர்களும் சேர்ந்து கொண்டனர். 

பெல் நிறுவனத்தில் இயங்கும் திமுக, அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், அம்பேத்கர் சங்கம், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம், தேசியத் தொழிலாளர் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், பி.எம்.எஸ் உள்ளிட்ட அனைவரும் திராவிடர் தொழிலாளர் கழகம் ஏற்பாட்டில் ஒன்றிணைந்தன.  கணேசபுரம் பகுதியில் 29.04.2014 அன்று மாலை 6 மணிக்கு, 13 சங்கங்களின் சங்கமிப்பு கூடியது. திருச்சி மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் மு.சேகர் தலைமை வகிக்க, ம.ஆறுமுகம் ஒருங்கிணைத்தார். மண்ணின் மைந்தர்கள் துயரத்தில் !

அனைத்துச் சங்கங்களும் இணைந்துத் தொடுத்த வழக்காகவே இதை நாம் கொள்வோம். நம்முடைய ஒருமித்த குரலுக்குக் கிடைத்த நீதி இது. இந்த நீதியை எடுத்துச் சென்று வெல்வது நம் கடமை. முப்பது ஆண்டு கள் உழைத்து, உழைத்துத் தம் இன்னுயிரை இழந்தவர்கள், நம் தொழிலாளர்கள். பெல் நிறுவனத்திற்கு "மகா ரத்னா" விருதைப் பெற்றுத் தந்தவர்கள் வீழ்ந்து விடக்கூடாது. முப்பது ஆண்டுகள் உழைத்தும்,  இன்னமும் பெல் நிறுவனச் சீருடை அணிய முடியவில்லை. தன் வீட்டில் வேலை பார்த்த, தன் ஊரில் சுற்றி வந்தப் பலருக்கும் வேலை பெற்றுத் தந்த நல்ல நல்ல அதிகாரிகள் இங்கே இருந்தனர். இன்று வெளி மாநில மக்கள் குளிர்சாதன அறையை  அனுபவிக்க, மண்ணின் மைந்தர்கள் துயரத்தில் உழல்கின்றனர். மற்ற, மற்ற மாநிலங்களில் இதுபோன்ற  காணமுடியுமா? வாழ்க்கையை நிரந்தரப்படுத்துங்கள் !

ஆண்டுக்கு 240 நாள் வேலை செய்தாலே, நிரந்தரம் ஆகலாம் என்கிறது சட்டம். 30 ஆண்டுகள் ஆகியும், 240 நாள்கள் இன்னும் வரவில்லை என்கிறது நிருவாகம்.     தனியார் நிறுவனங்களுக்கு முன்மாதிரியாய் இருக்க வேண்டாமா பொதுத்துறை நிருவாகம்? சக மனிதரின் உழைப்பைச் சுரண்டுவதும், வாழ்வை வஞ்சிப்பதும்    எந்த வகையில் நியாயம்?   உடல் பலம் இல்லாத, உணவு பலம் இல்லாத தொழிலாளர்களுடன் பெரிய நிருவாகம் மோத லாமா?  ஏழ்மையான, உழைக்க மட்டுமே தெரிந்த நேர்மை யான மனிதர்கள் அவர்கள். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட  இனங்களில் இருந்து வந்தவர்கள். நீங்கள் அவர்கள் வேலையை அல்ல... வாழ்க்கையை நிரந்தரப்படுத்துங்கள்.

 போராட்டமே நம் ரத்தவோட்டம் !

முப்பது ஆண்டு கால எங்களின் போராட்டத்தில் பொது மக்களுக்கு எவ்வித இடையூறும்  இல்லை, நிருவாகத் திற்கோ சிறு இழப்பும் இல்லை. எங்களை நாங்களே வற்புறுத்திக் கேட்டோம். எனினும் அதிகாரிகள் நியாயம் தரவில்லை. அதிகாரிகள் பலரும் உயர்ஜாதியில் இருக் கிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களில் சிலர் நல்ல பதவிக்கு வருகிறார்கள்.  உயரத்திற்கு வந்ததும், அவர்களும் உயர் ஜாதியாய் மாறிப் போகிறார்கள். எனினும் போராட்டம் எங்கள் ரத்தவோட்டம் என்பதற்கிணங்க எல்லா சங்கங் களும் இணைந்தே இருப்போம். நல்லதொரு தீர்ப்பு நம்மை நாடி வந்துள்ளது. இந்த நேரத்தில் வெல்லாமல் போனால், பிறகு எப்போது? தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்த திராவிடர் கழகத்திற்கும், அதன் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து, தொடந்து போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
  
                                                                                                                         வி.சி.வில்வம்


Read more: http://www.viduthalai.in/page1/79530.html#ixzz30XSl2S3A

Friday, March 21, 2014

ஆசிரியர்களும் மாணவர்களும் இங்கே இதழாளர்கள்!




சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இருக்கிறது  தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி. மிகச் சிறந்த பள்ளி எனத் தமிழக அளவில் பெயர் பெற்றது. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளை 1986, 87ஆம் ஆண்டுகளில் அங்குதான் முடித்திருந்தேன். இன்றைக்கும் அப்பள்ளியின் தனித்தன்மையில் எள்ளளவும் மாற்றமில்லை; எனினும் எவ்வளவோ கூடுதல் மாற்றங்கள்! நாம் பேசுவது கல்வி மற்றும் மதிப்பெண்கள் குறித்து மட்டுமல்ல; படைப்பாளிகளாக மாறிப்போன ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்களின் ஆற்றல்கள் குறித்து! ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து சுழல் எனும் மாத இதழ் நடத்துகிறார்கள். 

சமூகச் சிந்தனையுடன் அவ்விதழ் தமிழ்நாடு முழுக்க வலம் வருகிறது. இதில் பெரு மகிழ்ச்சி ஒன்றும் இருக்கிறது. ஆசிரியர்களின் வழித்தடத்தில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களும் இதழ் நடத்துகிறார்கள்.

ஒரு பள்ளியில் ஆசிரியர்களும், மாணவர்களும் தனித்தனியாக  இதழ்கள்  நடத்துகிறார்களா? நம்ப முடியவில்லையே! என நீங்கள் எண்ணினால், நம்பித்தான் ஆக வேண்டும். காரணம், அந்த நம்பிக்கையை அப்பள்ளியின் தலைமையாசிரியர் அள்ளிக் கொடுக்கிறார். இன்னும் சொன்னால், தந்தை பெரியாரின் சிந்தனையை ஒட்டிய பாதையில் அவர்களின் பயணம் இருக்கிறது.

சுழல் மாத இதழ் 

வேலை நாளின் ஒரு பொழுதில் நாம் பள்ளிக்குச் செல்கிறோம். எல்லோரிடமும் பேச வேண்டும் என நாம் கோரியபோது, தலைமையாசிரியர் முகமலர்ந்து அனுமதிக்கிறார். சுழல் மாத இதழின் பொறுப்பாளர்களைச் சந்திக்கிறோம். நாங்கள் இதழ் தொடங்கி 20 மாதங்கள் முடிந்துவிட்டன. பள்ளி முடிந்து ஆசிரியர்கள் பேசிக் கொண்டிருப்போம். அப்போது சுழலத் தொடங்கியது எங்கள் சுழல்.

தமிழ்நாடு முழுக்க 1000 பிரதிகள் அனுப்புகிறோம். மாணவர்களுக்குப் படிப்பு மட்டும் முக்கியமல்ல என்பது எங்கள் கருத்து. சுழல்  இதழில் மாணவர் அரங்கம் வைத்திருக்கிறோம். அதில் அவர்கள் எழுதுகிறார்கள். நாங்களும் அவர்களுக்கு நிறைய  இதழ்கள் மற்றும் படைப்புகளை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறோம். எந்த ஒன்றையும் நாங்கள் திணிக்க விரும்பவில்லை. தாமே  இச்சமூகத்தை உணர்ந்து, தாமே ஒரு கருத்தை உருவாக்கி, தங்களைத் தாங்களே தயார் செய்து கொள்ளும் ஒரு சூழலை உருவாக்க விரும்புகிறோம்.

கண்டுபிடிக்கும் கலை 

வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் எனும் அமைப்பு இப்பள்ளியில் செயல்படுகிறது. அதில் மாணவர்களுடன் நாங்கள்  ஒன்று சேர்வோம். அங்கு அவர்கள் கவிதை வாசிப்பார்கள் , ஓவியம் வரைவார்கள், தாங்கள் வாசித்த படைப்புகள் குறித்து விமர்சனம் செய்வார்கள். ஆண்டுதோறும் ஜூலை மாதம் ஒரு வாரம் விழா எடுப்போம். அங்கு எங்கள் மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டுபிடிப்போம். அது அவர்களின்  திறன்களை மேலும் வளர்த்தெடுக்க எங்களுக்கு உதவும். இவ்வாறான செயல்பாட்டில், எங்கள் மாணவர்கள் வாசித்த கவிதைகளை மொட்டுகளின் வாசம் எனத் தலைப்பிட்டு ஒரு நூலாகக் கொண்டு வந்தோம். தமிழ்நாட்டில் வெளியாகும் பிற இதழ்கள், புதிய நூல்கள், நாவல்கள் எனக் கேட்டு, கேட்டு வாசிக்கும் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.

உயர் எண்ணம்  உருவாக்கல்

மொழி வள ஆய்வு மையம் என ஒரு கூடம் எங்கள் பள்ளியில் உள்ளது. அங்கு நல்ல பேச்சுகளை ஒளிபரப்புவோம். அதையும் அவர்கள் தொடர்ந்து  கேட்டு, வளர்கிறார்கள். அதேபோல சுபம் எனும் அமைப்பு உள்ளது.

மாணவர்களுக்காக மாணவர்கள் என்பது அதன் தத்துவம். தினமும் உண்டியல் ஏந்தி வகுப்புகள் தோறும் செல்வார்கள். தங்களால் முடிந்த காசுகளை மாணவர்கள் அளிப்பார்கள். அப்பணம் வாய்ப்பில்லாத மாணவர்களுக்குச் செலவழிக்கப்படும். சக மனிதருக்குப் பயன்படும் வகையில் வாழ வேண்டும் என்பதைச் சுபம் அமைப்பின் மூலம் உணர்த்தியுள்ளோம். மேற்சொன்ன அத்தனை நிகழ்வுகளுக்கும் பின்னால் எங்களின் தலைமையாசிரியர் யாகு அவர்கள் இருக்கிறார்கள். 

சிறந்த மாணவர்களை உருவாக்குவது மட்டும் அவர்களின் பணியல்ல, அதைவிடச் சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதும் அவர்களின் பணியாக இருக்கிறது. அதனால்தான் நாங்கள் இப்படி இருக்கிறோம், என ஆசிரியர்கள் கூறி முடித்தார்கள். 

சக ஆசிரியர்களின் பாராட்டுக்குரிய தலைமையாசிரியர் என்ன சொல்கிறார்? பெரியார் தந்த பாடமல்ல; பாடமே பெரியார்! சந்தியாகு எனும்  பெயரை யாகு என மாற்றிக் கொண்டேன். பர்மாவில் இருந்து 1960 இல் தமிழகம் வந்தது எங்கள் குடும்பம். 

புனேயில் உள்ள இறையியல் தத்துவக் கல்லூரியில் (சேசு சபை) பயிற்சி மேற்கொண்டேன். ஏதாவது ஒரு தத்துவத்தை விரும்பிப் படிக்கலாம் என்ற போது, நான் பெரியாரைப் படித்தேன். நான் வாசித்து முடித்த நிறைய பெரியார் புத்தகங்கள், இன்னும் புனே இறையியல் கல்லூரியில் உள்ளது. துறவறம் என்பது அனைத்தும் சேர்ந்தது என்றே நான் நினைக்கிறேன். பழையது பேசுவது மட்டுமே  என் நோக்கமல்ல. கலை, இலக்கியம் போன்றவற்றில் ஆர்வமாக இருப்பேன்.  இசை குறித்துப் பேசுவேன், சினிமா விமர்சனம் செய்வேன், நேற்றைய அரசியல் வரை தெரிந்து வைத்திருப்பேன். விளையாட்டு எனக்குப் பிடித்த ஒன்று. ஜெபம் செய்ய நேரமானாலும், மாலை நேரங்களில் விளையாடாமல் இருந்ததில்லை. எல்லா விளையாட்டிலும் நான் இருப்பேன். சுறுசுறுப்பாய் இருப்பதில் எனக்கு எப்போதுமே பிரியம். அதனாலே எனக்கு நோய்கள் வருவதில்லை. மாத்திரை, மருந்துகளும் தேவைப்படுவதில்லை. எனக்குப் பிடிக்காத ஒரே விளையாட்டு கிரிக்கெட். அதை அறவே வெறுக்கிறேன்.

கிளிப்பிள்ளை மாணவர்கள் 

என் மாணவர்களிடம் நான் சமூகக் கருத்துகள் பேசுவேன். மாணவர்கள் பேச வேண்டும், எழுத வேண்டும், நடக்க வேண்டும், ஓட வேண்டும் என்பது என் விருப்பம். மாணவர்களுக்குப் படிப்பு மட்டும் போதாது. இன்றைக்கு 9 ஆம் வகுப்பு வரை எல்லோரும் தேர்ச்சி என்கிறார்கள். இது ஆசிரியர்கள், மாணவர்கள் இருவரின் வளர்ச்சிக்கும்  தடை. மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஆசிரியர்களின் நிலை மாற வேண்டும். வெறும் சதைப் பிண்டமான, கிளிப்பிள்ளை மாணவர்கள் நமக்குத் தேவையில்லை. இயல்பான, ஆற்றல் கொண்ட தலைமுறையை உருவாக்குவது நம் கடமை.

மனித உறவு முக்கியம்

புத்தகம் வாசிப்பதில் குறைவு ஏற்பட்டாலும், மனிதர்களை வாசிப்பதில் குறைவு இருக்கக் கூடாது என எண்ணுவேன். மாணவர்களுடன் நல்ல உறவு வேண்டும் என்பது என் அபிப்பிராயம். ஆசிரியர்கள் வீட்டு நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் செல்வேன். விழாக்கள் நிறைய ஏற்பாடு செய்வேன். அது உறவுகளை வளர்க்கும் என்பது என் நம்பிக்கை. ஓரியூர் என்ற கிராமத்தில், 1991 இல் நான் முதன்முதலில் வகுப்பு எடுத்த 58 மாணவர்களுடன் இன்றும் நட்பில் இருக்கிறேன். அவர்களுடன் சேர்ந்து என்னாலான சமூக சேவைகளைச் செய்து வருகிறேன். 

பெரியாரின் தாக்கம்

உடல் ஊனமுற்ற ஒரு இளைஞர், சக்கர நாற்காலியில் எங்கள் பள்ளிக்கு வந்தார். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு முன் அந்த இளைஞரைப் பேசச் சொன்னேன். எங்கள் மாணவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் நாங்கள் தைரியத்தைக் கொடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில்  குப்பையாகச் சேர்ந்துள்ள தாள்களை (paper), விடுதி மாணவர்கள் மூலம் சேகரிக்கச் சொன்னேன். ஆண்டு இறுதியில் அதை விற்று, சிறப்பான பொங்கல் விழா எடுத்தோம். அதேபோல  சக மாணவனுக்கு உதவவும், அவனை நேசிக்கவும் சுபம் என்றொரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல மாணவர்களை உருவாக்குவதே ஆசிரியர் பணி. அந்த வேலையைச் செய்வதோடு, ஆசிரியர்களை முடுக்கிவிடுவதையும் முக்கியக் கடமையாக நினைக்கிறேன். முடிவு செய்துவிட்டால், செய்தே தீருவது என் இயல்பு. இப்போது இல்லாவிட்டால் எப்போது ? என்பது நான் அடிக்கடி கேட்டுக் கொள்ளும் கேள்வி.

ஒட்டு மொத்தத் தமிழரின் ஆளுமையையும் நிமிர்த்தி வைத்த பெரியாரின் தாக்கம், எனக்குள்ளும் இருக்கிறது என்பது, என் செயல்களின்  பின்புலமாக இருக்கலாம். ஆசிரியர்கள், தலைமையாசிரியர் சந்திப்புக்குப் பின்னர் மாணவர்களைச் சந்திக்கிறோம். சமூகமே எந்திரி இதழின் ஆசிரியர் சி.சேதுராஜா, துணையாசிரியர் சு.மணிகண்டன். இவர்கள் 10 ஆம் வகுப்பு மாணவர்கள். பேனா முனை  இதழின் ஆசிரியர் இ.ஆரோக்கிய மார்சலின், துணையாசிரியர் கா.விமல். இவர்கள் 9 ஆம் வகுப்பு மாணவர்கள்.
இவர்கள் என்ன சொல்கிறார்கள்? நாம் வாழ்வதற்கு ஏதாவது பொருள் வேண்டும், நம் பயணம் சமூகம் நோக்கி இருக்க வேண்டும் என எங்கள் ஆசிரியர்கள் கூறுவார்கள். அவர்களின் சுழல் இதழைத்  தொடர்ந்து  வாசித்தோம். பின்னர் நாமே ஏன்  நடத்தக் கூடாது என யோசித்து, இதழைத் தொடங்கி விட்டோம்.

மாதம் 100 புத்தகங்கள் தயார் செய்கிறோம். மாணவர்கள் நாங்களே செலவுகளைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆசிரியர் குழுவில் 10 பேர் இருக்கிறோம். சக மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் அனைவரின் ஒத்துழைப்பும், பாராட்டும் எங்களை வழி நடத்துகிறது என்கிறார்கள் மாணவர்கள்.

                                                                                                                     - வி.சி.வில்வம்