Tuesday, February 19, 2013

ஆங்கிலத்தைக் காட்டிப் பயமுறுத்துகிறாய்?

உலகின் அனைத்து நாடுகளிலும்
தமிழன் வசிக்கிறான்.

சைனாவில் சைனிஷ் பேசுகிறான்
கியூபாவில் ஸ்பானிஷ் பேசுகிறான்
அரபு நாடுகளில் அரபிக் பேசுகிறான்
ரஷ்யாவில் ரசியன் பேசுகிறான்
ஜப்பானில் ஜப்பானிஷ் பேசுகிறான்
ஜெர்மனில் ஜெர்மன் பேசுகிறான்
மலேசியாவில் மலாய் பேசுகிறான்
கொரியாவில் கொரியன் பேசுகிறான்
பிரான்சில் பிரெஞ்ச் பேசுகிறான்
இத்தாலியில் இத்தாலியன் பேசுகிறான்
தாய்லாந்தில் தாய் பேசுகிறான்
பர்மாவில் பர்மீஸ் பேசுகிறான்
எதோப்பியாவில் ஏரோமா பேசுகிறான்
பெல்ஜியத்தில் டச் பேசுகிறான்
கம்போடியாவில் கீமர் பேசுகிறான்
தென்னாப்பிரிக்காவில் சுளு பேசுகிறான்
கானாவில் அகான் பேசுகிறான்
சோமாலியாவில் சோமாலி பேசுகிறான்
நைஜீரியாவில் லிக்போ பேசுகிறான்

உலகில் 250 க்கும் மேற்பட்ட நாடுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் அதிகபட்சம் 20 நாடுகளில் வேண்டுமானால் ஆங்கிலம் பேசப்படுகிறது. மற்ற அனைத்து நாடுகளிலும் மொழிகள் வேறு. ஆனால் தமிழ்நாட்டில் என்ன சொல்கிறான்? ஆங்கிலம் தெரியாவிட்டால் உலகில் எங்குமே போக முடியாது என்கிறான். ஆங்கிலத்தை ஏன் பெரிதாகக் காட்டி, காட்டிப் பயமுறுத்துகிறாய்? நீ பயமுறுத்துவதால் தான் குழந்தைகளும் பயப்படுகிறது. ஆங்கிலம் படிப்பதால் பல நன்மைகள் இருப்பதும், நம் குழந்தைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதை ஒரு நோக்கமாக நாம் வைத்திருப்பதும் வேறு விசயம். நீ பயமுறுத்துவதும், அம்மொழி மீது அநியாயத்திற்கு கவுரவத்தை ஏற்றி வைப்பதும் ஏனென்றுதான் புரியவில்லை?

பிப்ரவரி 21 - உலகத் தாய் மொழி தினம்.

Wednesday, February 13, 2013

கழுகு குறித்த கனத்த செய்தி!

                                                  
பறவைகள் இனத்தில், கழுகு மட்டுமே நீண்ட காலம் வாழும் பறவை யாகும்.கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் உயிர் வாழும். அதன் 40 ஆவது வயதில் அது சந்திக்கும் பிரச்சினைகள் என்ன தெரியுமா?

உண்பதற்குப் பயன்படும் அலகுகள் பெரிதாகி, உண்ணவே முடியாத சூழல் உருவாகும். கால் நகங்களும் மிகப் பெரியதாய் வளர்ந்துவிடும். அதுமட்டுமின்றி இறக்கைகள் அடர்த்தியாக வளர்ந்து, பறக்கவே முடியாத நிலை வரும். ஆக,பறக்கவோ, இரை தேடவோ, உண்ணவோ முடியாத கொடுமையான நிலையில் அது வாழும். அந்தக் கால கட்டத்தில் கழுகுகள் என்ன செய்யும் தெரியுமா?

பெரிதான தன் அலகுகளைப் பாறையில் தேய்த்து உடைக்கும்,
கால் நகங்களின் தேவையற்ற பாகங்களைப் பிய்த்து எரியும்,
அடர்ந்த தன் இறக்கைகளை உரித்து எரியும்.தன்னைத்தானே சீரமைத்துக் கொள்வதற்குக் கழுகுகள் எடுத்துக் கொள்ளும்
காலம் 5 மாதங்கள்.

எந்தப் பயிற்சியும் இல்லாமல், யாரும் சொல்லிக் கொடுக்காமல்
போராடி ஜெயிக்கின்றன கழுகுகள்.(எனினும் கழுகுகளுக்கு அய்ந்தறிவு எனவும், மனிதர்களுக்கு ஆறறிவு எனவும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.)

இந்தக் கொடிய போராட்டங்களுக்குப் பிறகு,கழுகுகள் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கிறது தெரியுமா? அசந்து விடாதீர்கள்...
30 ஆண்டுகள்.

Tuesday, February 12, 2013

தொடர்வண்டி பயணம் செய்வோரின் அன்பான கவனத்திற்கு!

 


எனக்கு அண்மைக்காலமாக அய்ந்து, ஆறு முறைக்கு மேல் இந்த அனுபவம் ஏற்பட்டுவிட்டது.திருச்சியிலிருந்து காலை 06.30 மணிக்குப் பல்லவன் இரயில் சென்னைக்குப் புறப்பட்டுச் செல்லும்.நான் அந்த நேரங்களில் உறவினர்கள்,நண்பர்களை வழி அனுப்பச் செல்வேன். ஏறத்தாழ 0.45 நிமிடங்கள் முன்னரே வண்டி நடைமேடைக்கு வந்துவிடும். எனினும் கடைசி நொடியில் சிலர் "பறந்து" வருவார்கள். சிலருடன் குழந்தைகளும், சிறுவர்களும் வருவார்கள். வாய்ப்பைப் பொறுத்து, அவர்கள் வண்டியில் ஏறுவார்கள் அல்லது  நடைமேடையிலே நிற்க வேண்டிவரும். இதுபோன்ற நேரங்களில் எப்போதோ நான் படித்த அந்தப் பொன்மொழி நினைவுக்கு வரும், "ஓடுவதில் பயனில்லை; நேரத்தில் புறப்படுங்கள் !

இது ஒருபுறம் இருக்க, இன்னொன்றை முக்கியமாய் சொல்ல வேண்டும். இவர்கள் எப்படி என்றால் நேரத்திற்கு வந்து விடுவார்கள், ஆனாலும் இரயிலை விட்டுவிட்டு நடைமேடையில் நிற்பார்கள். இது எப்படி என்றால்... நான் பார்த்த நிகழ்வை அப்படியே பதிகிறேன். கணவன் - மனைவி இருவரும் சென்னைக்குப் பயணப்படுகிறார்கள். இரயில் புறப்பட 10 நிமிடம் இருக்கும் போது, அந்தக் கணவர் தண்ணீர் பிடிப்பதற்காக இறங்குகிறார். குடிநீர்க் குழாய், அவர் இருக்கும் பெட்டியில் இருந்து சற்றுத் தள்ளி இருக்கிறது. எனினும் அவர் சென்று தண்ணீர் பிடித்து திரும்பும் வேளையில் இரயில் புறப்பட்டது. அவரின் மனைவி இரயில் வாசல்படியில் நின்று கதறுகிறார். கணவரோ தன்னுடைய பெட்டியை நோக்கி வேகமாக ஓடி வருகிறார். இறுதியில்
அவரால் வண்டியில் ஏறமுடியவில்லை. மனைவி மட்டும் பயணம் செய்ய, இவரோ பரிதாபமாய் நின்று கொண்டிருந்தார்.

இந்த இடத்தில் தான் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. தொடர்வண்டி என்ற பெயர் எதற்கு ? தொடர்ந்த வண்டி, நீளமான வண்டி என்று பொருள். ஆக நடைமேடையில் நீங்கள் எந்த இடத்தில் நின்றாலும், உங்கள் அருகில் இருக்கும் பெட்டியிலேயே நீங்கள் ஏறிவிடலாம். அங்கிருந்து கடைசிவரை நீங்கள் நடந்தே போகலாம். இது ஒரு எளிய நடைமுறை. எனினும் இதுகுறித்து தெரியாத காரணத்தால் தண்ணீர் பிடிக்கவும், உணவு வாங்கவும், புத்தகம் வாங்கவும் சென்றவர்கள், கடைசி வரை இரயிலில் ஏற முடியாத நிலையைப் பலமுறை பார்க்க நேரிடுகிறது. திட்டமிட்டுப் பயணம் செய்ய நினைத்து, இதுபோன்ற நிலையால் ஏற்படுகின்ற வழியை, மனஉளைச்சலை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதற்குத் தீர்வாக நேரத்திற்கு வருவதும், கடைசி நேரங்களில் தொடர்வண்டியில் இருந்து இறங்குவதைத் தவிர்த்தும், ஒருவேளை இறங்கினால், அருகில் உள்ள பெட்டியில் ஏறிக் கொள்வதையும் நடைமுறையாகக் கொள்வோம்.

அப்போதுதான் இரயில் நிலையங்களில் கடைசியாகச் சொல்வார்களே, "உங்கள் பயணம் இனிதாகட்டும்" என்ற வாசகத்தை நம்மால் ரசிக்க முடியும்.


                                                                                                                                                                                                                                                                              வி.சி.வில்வம்

                                                                                          

இவர்கள் மனிதர்கள்!



புதுக்கோட்டை அருகே எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கு அண்மையில் ஒரு பெண்ணைத்  திருமணம்  செய்யப் பேசி முடித்தார்கள். ஒரு சில நாட்கள் சென்ற  பிறகு, அப்பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாமல்  போனது. பரிசோதனைக்குப் பின்னர் அப்பெண்ணுக்கு
வயிற்றில் "புற்றுநோய்  கட்டி" இருப்பது தெரிய வருகிறது.எல்லோருமே ஆடிப்போனார்கள். குணப்படுத்தவே முடியாத கட்டி என்றும், புற்றுநோயின் கடைசியில்  அவர் இருப்பதாகவும் மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர். இந்நிலையில்  என்ன நடந்தது தெரியுமா நண்பர்களே? இன்றைய தினம்  (02.09.2012) அப்பெண்ணுக்கும், என் நண்பருக்கும் நிச்சயதார்த்தம்  நடந்துவிட்டது. அதற்கு என் நண்பன், " நான் அப்பெண்ணை  திருமணம் செய்வதாக ஒப்புக் கொண்டுவிட்டேன். வார்த்தை  மீறுவது தற்கொலைக்குச் சமம். நடப்பது நடக்கட்டும் !" என இயல்பாகக் கூறினான்.

அதேபோன்று திருச்சி கே.கே. நகரில் வசிக்கும்  இன்னொரு நண்பரின்
நேயமும், நினைவில்  வருகிறது. ஒரு வயதான தம்பதிக்கு 23 வயதில்
ஒரு மகள். பக்கத்து வீட்டில் என் நண்பர் இருக்கிறார். அப்பெண்ணுக்கு அடிக்கடி  உடல்நிலை பாதிக்கிறது. வயதான அம்மா,அப்பாவால் தினமும் மருத்துவமனைக்குச் செல்ல இயலவில்லை. இந்நிலையில் என் நண்பரிடம் வருகிறார்கள். மாத்திரைகள் வாங்கவும், மருத்துவமனைப் போகவும் தொடர்ந்து அவர்  உதவுகிறார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. குணமாகாது என்றும் மருத்துவர்கள்கூறிவிட்டார்கள்.
இறந்து போகவும் அப்பெண் தயாராகிவிட்டார். இந்நிலையில் என்ன நடந்தது தெரியுமா நண்பர்களே? உதவி செய்யப் போன நண்பனால் ஓர் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை,  அதேநேரம் அப்பெண்ணின் உணர்வுகளைச் சிறிதும் காயமின்றி காப்பாற்ற முடிந்தது. ஆம்! அப்பெண்ணையே நண்பர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின் 15 ஆண்டுகள் கழித்து அப்பெண் இறந்து போனார். திருமண வாழ்வில் ஒருநாள் கூட அவர்கள் உடலுறவு வைத்துக் கொண்டதில்லை. காரணம்  அதற்கான உடல் தகுதியை அப்பெண் பெற்றிருக்கவில்லை.

நான் சொல்ல வருவது இதைத்தான் நண்பர்களே ! முதல் செய்தியில்
நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நண்பரும், இரண்டாவதில் திருமணம்
செய்து கொண்டவரும் நம்மிடையேதான் வாழ்கிறார்கள். நாமும்தான்
வாழ்கிறோம்!  நான் யாரையும் பிழை சொல்லவில்லை. மாறாக
நாம் அதிகம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
     

                                                                                                                             வி.சி.வில்வம்

Sunday, February 3, 2013

பெல் தமிழ்ப் பயிற்று மொழி பள்ளி

தாய்மொழியின் சிறப்பை வலியுறுத்தும் எண்ணற்ற  அமைப்புகள் இங்கு உள்ளன. தாய்மொழிக் கல்வியால் சிந்தனை வளரும்; சிந்தனை அறிவைப் பெருக்கும்; அறிவு ஆற்றலைக் கொடுக்கும்; ஆற்றல்
தன்னம்பிக்கையை வளர்க்கும் எனப் பேச்சுகளாகவும், கட்டுரைகளாகவும் குவிந்து கிடக்கின்றன. இவையெல்லாம் எங்கே தெரியுமா? மொழியின் பெயரிலேயே நாட்டை வைத்திருக்கும் நம் "தமிழ்"நாட்டில்தான்!
மொழிக்காகப்  பெரும் கிளர்ச்சிகளையும், கணிசமான தமிழர்களையும்
கொடுத்த நாடு இந்த நாடு. இத்தமிழ்நாட்டில்தான் தாய்மொழிக் கல்விப்
பெரும் சீரழிவில் இருக்கிறது. 

இந்தியாவின் எல்லா மாநில மக்களும் தத்தம் மொழிக்கு  முதல் மரியாதையும், பிற மொழிகளுக்கு இரண்டாம் இடமும்  வழங்குகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் ஆங்கிலத்திற்கு முதல் மரியாதையும், இந்திக்கு  இரண்டாம் மரியாதையும், பிற பிற வெளிநாட்டு மொழிகளுக்கு மூன்றாம் மரியாதையும் வழங்குகிறார்கள். தாய்மொழித் தமிழுக்கு இறுதி மரியாதை  கூட தருவதில்லை. ஒரு குழந்தைத்  தமிழ் வழியில் பயில்கிறது என்றால் ஒன்று, அக்குழந்தை  இனவுணர்வாளர் குடும்பத்திலிருந்து வந்திருக்க வேண்டும் அல்லது தொழிலாளர் குடும்பத்திலிருந்து வந்திருக்க வேண்டும். பொருளியல் நலிவடைந்த ஒரு தொழிலாளர் தங்கள் குடும்பக் கவுரவம் (?) பாதிக்கக் கூடாது என எண்ணினால் அங்கும் ஆங்கில வழிதான்.  

ஏனெனில் மொழி என்பது இங்கு கவுரமாகவும், அறிவாகவும் பார்க்கப்படுகிறது. தமிழ் மொழியால் கவுரவம் போய்விடுகிறது, ஆங்கில வழியால்  அறிவு வந்துவிடுகிறது. அவ்வளவுதான் ! இந்த வினோதமான பிழை  எண்ணம் அனைத்துத் தமிழர் நெஞ்சங்களிலும் புற்றுநோயாகச்  சிவந்துக்  கிடக்கிறது.

சில உணர்வாளர்கள் கூட, நல்ல பள்ளிகள் இல்லையே எனக்  கவலைப்படுவதாய்க்... கவலைப்பட்டு, ஆங்கில வழிக்கு உரம் சேர்க்கின்றனர். இது என்ன அறம் எனத் தெரியவில்லை. தமிழர்கள் பல்வேறுபட்ட அமைப்புகளில் இருக்கிறார்கள், இருக்கட்டும் ! ஆனால் தான் பின்பற்றும்  கொள்கைகளைத்  தவறாது பின்பற்ற  வேண்டும். அப்போதுதான் அக்கொள்கைக்கு மதிப்பும் ஏற்படும், கூடவே சமூக அங்கீகாரமும் கிடைக்கும். நாம் பின்பற்றாமல் நம்முடைய  வெறும் பேச்சும், வெறும் பிரச்சாரமும் எந்தப் பலனையும் கொடுக்காது. மாறாக செயல், செயல், செயல் ஒன்றுதான் இங்கு சிறப்பு. இப்படியான "செயல்படும்" ஒரு சமூகத்தைக் கட்டி அமைக்க நல்ல அரசியல் அமைப்பும் நம்மிடம் இல்லை. 

ஆனாலும், "தாய்மொழியில்  பயின்று நான் ஒரு விஞ்ஞானியாக இருக்கிறேன். தாய்மொழியில் படித்தால்தான் அறிவும், சிந்தனையும் உயரும்", என மயில்சாமி அண்ணாதுரை மேடை தோறும் முழங்குகிறார். அதேபோல 8 மொழிகள் பேசும், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னால் துணைவேந்தர் மு.பொன்ன வைக்கோ, "எத்தனை மொழிகள் தெரிந்தென்ன? அத்தனைக்கும் அறிவைத் தந்தது தாய்மொழிதான்" என அற்புதமாய் ஒலிக்கிறார்.

இப்படியான சூழலில் தாய்மொழிக் கல்வியைச் சிறப்பாகவும், இன்னபிற
உயர்தர (!) பள்ளிகளுக்கு இணையாகவும் செயல்படும் ஓர் பள்ளியையும் இங்கே நாம் நெஞ்சில் பதிய வேண்டியிருக்கிறது.
திருச்சிராப்பாளி மாவட்டம், திருவெறும்பூர்  கைலாசபுரம் (BHEL) வளாகத்தில் "பெல் தமிழ்ப் பயிற்று மொழி"  நடுநிலைப்பள்ளி உள்ளது. 1964 - இல் தொடங்கப் பெற்று, 48 ஆண்டுகள் ஆனது. தொடக்கத்தில் 32 மாணவர்களும், இரு ஆசிரியர்களும் இருந்துள்ளனர். இன்று சற்றொப்ப 800 மாணவர்களும் , 28 ஆசிரியர்களும் நிரம்பி இருக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டின்  பெரும்பாலான பள்ளிகளில் இது தலைகீழாக இருப்பதை நாம் உணர முடியும். அதாவது தொடக்கத்தில் 800 மாணவர்களுடன்  28 ஆசிரியர்களும்,  இப்போது  32 மாணவர்களுடன்,  2 ஆசிரியர்களுமே இருப்பர். ஆனால் அப்படி இல்லாமல் இப்பள்ளி, சாமான்ய வீட்டுக் குழந்தைகளைச் சாதிக்க வைத்தும், கல்வியின் தரத்தை மேம்படுத்தியும், பிற பள்ளிகளுடன் ஆக்கபூர்வமாகப்  போட்டியிட்டும் அசராமல் தடம் பதித்து வருகிறது.

இந்த ஊரின் அனைத்துப் பள்ளிகளுக்கும் இடையேயும் நிகழும், அனைத்துப் போட்டிகளிலும் இப்பள்ளி மாணவர்கள் பங்கு பெறுவர்; பரிசுகளை அள்ளி வருவர்!  பரிசுகளே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, களத்திற்கு சென்று வா என மாணவர்களை அனுப்பிவிடுகின்றனர்.

ஒரு கல்லூரிக்கு நிகரான சாரண சாரணீய இயக்கம் நடத்துவதும், ஆண்டுதோறும் மாணவர் தலைவர், உபதலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதும், தினமும் ஒரு திருக்குறள் கூறி மாணவர்களின் வாழ்க்கையை ஒழுங்குப்படுத்துவதும், பொதுச் செய்திகளை வாசித்து மாணவர்களைச்  சமூகப்படுத்துவதும், சட்ட வாக்கியங்களை எடுத்துக் கூறி விழிப்புணர்வூட்டுவதும் எனப்  பல்வேறு சிறப்பம்சங்கள் இங்கு தொடர்கின்றன.அதுமட்டுமின்றி, தினமும் ஒரு ஆங்கில வரிகளைக் கற்றுத் தருவதும், விளையாட்டு  விழா, ஆண்டு விழா, குழந்தைகள் தின விழா என ஒன்று விடாமல் நேர்த்தியாக நடத்தி, குழந்தைகளை உற்சாகப்படவும் வைக்கிறார்கள்.

நாம் மேலே எழுதிய ஆங்கில மோகம், கவுரவம் எல்லாவற்றையும் உதறித்தள்ளி, இப்பள்ளியைப்  பெற்றோர்கள் தேர்வு செய்கிறார்கள் என்பதே இப்பள்ளிக்கான உயர்தரச் சான்றாக உள்ளது.  இப்பள்ளியின் பெருமைகளுக்கு "பெல் நிறுவனம்"முக்கியக்  காரணமாக அமைந்து வருகிறது. இதேபோன்ற நிலையைத்  தமிழ்நாடு முழுக்க இயங்கி வரும் பள்ளிகளும் பெற வேண்டும். இது மொழி உணர்வாளர்களின் தனிப்பட்ட கவலை அல்ல.  நல்ல சமூகத்தை, ஆற்றல் நிறைந்த மாணவர்களை  உருவாக்க  வேண்டும் என நினைக்கிற ஒவ்வொருவரின் கவலையும் ஆகும்! 



வி.சி.வில்வம்

  
                                                                                                   

Friday, February 1, 2013

அன்புள்ள அப்பாக்களுக்கு !

                                                    
சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஆண்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. ஒரு குடும்பம் என்கிற போது ஆண் என்கிற அந்த "அப்பாக்களின்" செயல்கள்  அக்குடும்பத்தையே சிதைக்கிறது. வெளியில் சொல்ல முடியாமல் அவர்களின் மனைவிகள் வெந்துச் சாகிறார்கள்.  இவைகள் பொறுக்க முடியாமல் போகிற போதுதான் வன்முறைகளும், கொலைகளும்  தீர்வாக வந்து நிற்கின்றன.மனைவிகளுக்குக் கோபம் வராததும், அவமானமாய்த் தெரியாததும் அப்பக்களுக்குச் சாதகமாய் இருந்து வருகிறது. 


தன்னுடன் சேர்ந்து நட்பாய், துணையாய், தோழராய், எல்லாமுமாய் வாழ வந்த அந்த மனைவியை, ஒரு பொருளாய் மிருகமாய், கேவலமாய் நடத்துவது எந்த விதத்தில் நியாயம் ? நீங்கள் சிரித்தால் மனைவியும் சிரிக்க வேண்டும் ;  நீங்கள் அழுதால் அவர்களும் சேர்ந்து அழவேண்டும்! அப்பாக்களுக்குக் கோபம் வந்தால் மனைவிகள் நிலை பரிதாபம். சம்பந்தமே இல்லாத விசயங்களுக்கும் சித்திரவதைச் செய்துவிடுவார்கள்.அப்பாக்கள் முறைத்தால் மனைவிகள் தள்ளி நிற்க வேண்டும் ; சிரித்தால் அருகில் வர வேண்டும் ! அதாவது குறிப்பால் உணர்ந்து சேவை செய்ய வேண்டும். இல்லையெனில் அப்பாக்கள் குதறிவிடுவார்கள். நாய் கூட நாம் சொல்வதைச் சிலநேரம் கேட்பதில்லை. இங்கு நாய்களைவிட, தாய்களின் நிலை மோசமாய் இருப்பதாய்ச்  சேய்கள் கண்ணீர் விடுகின்றன. 

பாதிக்கும் மேற்பட்ட அப்பாக்களுக்குத் திறமைகளே இருப்பதில்லை. ஆண்  என்கின்ற ஒரே காரணத்திற்காக தேவையற்ற அதிகாரத்தைச் இச்சமூகம்  அ(ழி)ளித்து வைத்திருக்கிறது. இன்னும் தன்  உடையைத் துவைக்கத் தெரியாது,  சாப்பிட்ட தட்டை, தேநீர்க் குடித்த குவளையைக் கழுவியது கிடையாது. மனைவிகள் இறுமி, இறுமி நோய் வாய்ப்பட்டாலும் ஒரு குவளைத் தண்ணீர் கொடுத்துப் பழக்கமில்லை. ஆனால் அவர்களது வெள்ளை வேட்டிகளும், வெள்ளைச் சட்டைகளும், பொது இடங்களில் அவர்கள் பேச்சுகளும் அருமையாக இருக்கும். வீட்டில் ஒன்று, வெளியில் ஒன்று என எல்லா அப்பாக்களுக்குமே இரண்டு முகங்கள் !

சில அப்பாக்களின் அராஜகம் இது மட்டுமா ? பொது இடங்களில் பார்த்தால் தெரியும் ! அடிப்படை நாகரிகமே இன்றி, பலர் மத்தியில் மனைவிகளைக் கொத்திக் கொண்டே இருப்பார்கள். சில அப்பா விலங்குகள் பொது இடங்களில் கை நீட்டி அடித்துக் கொண்டிருக்கும். பொது ஒழுக்கம், பொது நாகரிகம் எதுவுமே தெரியாது. ஆனால் அப்பா என்கிற ஆணவம் மட்டும் அதிகம் இருக்கும்.  அப்பாக்களுக்கு வருகிற  கோபங்களில் பாதிக்கும் மேல் அர்த்தமே இருக்காது. இவர்களின் கோபங்கள் குடும்ப மகிழ்ச்சியைச் சீரழித்திருக்கிறதே  தவிர, வேறு யாதொரு பயனும் இல்லை. 


இங்கே சில அப்பாக்களுக்கு ஒன்றை நாம் சொல்ல விரும்புகிறோம் உங்கள் மனைவிகளுக்கு எல்லாம் வாழ்நாளில் ஒரு சாவு கிடையாது. உங்களால் தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களோடு வாழ வந்த பெண்ணை, நெருப்பில் வேக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்பாக்களே! கொஞ்ச நேரம் ஓரமாய் அமர்ந்து யோசித்துப் பாருங்கள். மேற்கூறிய அனைத்தும் உண்மை என்பது புரியவரும். இன்னும் சொல்லப்படாத உண்மைகள் ஏராளம் இருக்கிறது என்பதும் தெரியவரும். உங்களின் ஆதிக்கக் குணத்தை, அதிகாரக் குணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள் குணங்களால் குடும்பமே அழிகிறது, குடும்ப அழிவால் சமூகம் சிதைகிறது, சமூகச் சிதைவால் இனமே பாழ்படுகிறது. ஏனெனில் தனி மனித குணங்களில்தான்  சமூக வளர்ச்சி உள்ளது.

ஆகவே மாற்றிக் கொள்ளுங்கள்.அனைத்தையும் தேடித் தேடி அழித்து விடுங்கள்.  இல்லையேல், இனிவரும் காலங்களில் எதுவும் நிகழலாம்.
"அப்பாக்கள் கைநீட்டி அடித்த போது, அந்தக் கைகள் வெட்டப்பட்டன, தேவையற்ற முறையில் திட்டிய போது நாக்குகள் அறுத்தெறியப்பட்டன  எனும் செய்திகள் வருவதற்கு முன் திருந்திக் கொல்லுங்கள; உண்மை நிலையை உணர்ந்துக் கொள்ளுங்கள் !

                                                         பேசத் தெரிந்த ஊமைகளின் சார்பாக


                                                                               வி.சி.வில்வம்